Sunday 31 May 2015

அடடாவோ அடடா

தேன் கனிக்குள் நாவினிக்கும். தித்திப்பிட்ட தாரோ 
தெங்கிள இன் நீரருந்தத் தீஞ்சுவை இட்டாரோ
வானமதை நீலமென்றும் வையகத்தைப் பச்சை
வண்ணமுடன் தீயெரியும் விண்ணமைத்த தாரோ
ஊன் படைத்து ஓசைகொண்ட உள்ளிதயப்பேழை
ஓடித் தினம் சூடுஏற்றும் உள் உதிரக் கூட்டை
மேன் எழுந்த வான சக்தி விந்தையுறச் செய்தே
மேதினியில் ஆக்கும்வாழ்க்கை அடடாவோ அடடா

மீன்தெறித்து நீர் விடுத்து மேகம்காணத் துள்ளும்
மேலெந்தழுந்த வேகத்ததிலே மீண்டும்நீருள் ஆழும்
வான்பறந்த புள்ளினங்கள் வந்து மாலைசேரும்
வாழ்வதற்கு வானமல்ல பூமியென்று கூறும்
தானுயர்ந்த நேரமென்று சுற்றியாடும் பட்டம்
தன்னிலையில் வாலறுந்து தாவிச்சுற்றி வீழும்
ஏன் மனிதம்மட்டும் இன்னும் ஏழை மண்ணில் காண
ஏய்த்தும் உண்ணும் எத்தருக்கோ என்றும் வானம் சொந்தம்

தேன்சுரக்கும் பூவைத்தொடத் தென்றல் வந்துசேரும்
திங்கள் வானில் பொன்னிறத்துத் தேசு கொண்டு வீசும்
மீன் விழிகள் கெஞ்சல் கண்டு மோகம் தேகம் கொள்ளும்
மின்னல் மழை நீர்பொழிந்து தண்மை ,கொண்டு மாறும்
மான்பிரித்த மாயம்போலும் மங்கும் மாலைவாழ்வில்
மையல் கொண்டுழன்ற தேகம் மஞ்சம் காடு காணும்
தானறிந்த இன்பம்கண்டு தூரமென்ற உண்மை
தன்னிலை மறந்த விந்தை அடடாவோ அடடா

மேனெடுக்கும் வாழ்விலேது மாற்றத்தோ டேமாற்றம்,
மிஞ்சும் இன்ப மேதுமில்லை மேகத்தூறல் போலும்
கானகத்தின் காயும்நிலா கண்டதென் ஒன்றாகும்
கல்லறை செந்தீயழிக்கும் காத்ல்மேனி யாவும்
தேனகத்தில் கொண்டுமென்ன சிந்தை நேர்மைமாறின்
சென்றபாதை யெங்கும் மண்ணில் தீயெழுந்து வேகும்
ஆனதென் எடுத்துவேகம் அல்லல் போக்க அன்பாம்
ஆயுதந் தனைக் கொள்ளின்பம் அடடாவோ அடடா

சாணுயர்வில் முழஞ்சறுக்கும் செய் வினைகள்கூடி
சடசடவென் றிடிமுழங்கும் சுற்றிமுகில் ஓடி
தானுயர்ந்த நீர்வழிந்து வெள்ளமென்று ஓடி
தண்திரை கொள்சாகரத்தின் தன்மை வேறென்றாகி
பேணுகின்ற மாந்தர் கூட்டம் பிரித்தழிக்குமாடி
பேரழிவைக் கொள்ளும் இனம் ஏழைகளென்றாகி
காணுகின்றபோது தெய்வம் கொண்டதென்னநீதி
காலமென்னும் காரணம் கணக்கில் கொள்வதோடி?

கங்கைபோலும் பொங்கும் நீரும் கன்னங்களில் ஓடி
கன்னி வாழ்விர் கண்டதென்ன காமுகர் கையோடிப்
பொங்கிடும்,தமிழ்க் குலத்துப் பூவையர்க்ள் மேனி
பூவெனும் தன் மைவிடுத்துப் போவதெங்கு மாறி
அங்கவன் அழிக்க இன்னும் அஞ்சலென்ன கூடி
அன்னையின் நிலம் மறக்க ஆகும் துன்பம்கோடி..
செங்குலம் சினத்தல்கண்டு சொல்லவேண்டும் பூமி
’ செந்தமிழ் மெய்வீரம் கண்டோம் அடடாவோ அட்டா’

பெண்மை(ஆகா அடடா) -கற்பனை கவிதை

சந்தன வாடை யெழுந்துவர அயல்
சாமரை வீசிநிற்க
செந்தமிழின் இளமென்குரலில் இன்பத்
தேனிசை கானம்வர
அந்தபுரத்திரு மங்கையர்கள் வந்து 
ஆடிக் களித்திருக்க
சிந்திநின்றேன் இளம் புன்னகையை மன்னன்
சிம்மாசனத் திருந்தே

கந்தரூப கன்னிப் பெண்ணொருத்தி கையிற்
கொண்ட திராட்சைக்கனி
முந்திப் பழுத்த நல்முந்திரியும் அதை
முற்றும் மதுவிலிட்டு
வந்து நின்றாள் எந்தன் முன்னிலையில் வஞ்சி
வார்த்தை மறந்தவளாய்
செந்தேன் வதனத்தில் சின்னத்தனம் கண்டு
சென்றிடு என்றுரைத்தேன்

வண்ண ஒளிச்செறி வாடிடவும் அந்த
வட்ட முகத்து நங்கை
எண்ணப் புரிவற்ற சேதியொன்றை வந்து
ஏனோ வெளியுரைக்க
கண்ணும் கண்ணும் மோதிக் கொண்டனவோ அதன்
காரணம் ஏதறியேன்
அண்ணளவில் மனம் ஆனந்தமோ
அடடா ஈதென்னுரைப்பேன்

(வெள்ளிச் சலங்கைகள் ஆடிய வேளையில்)
வீர முரசொலிக்க
(துள்ளியிரு பாவை நர்த்தனம் ஆடிட)
தொம் தொம் எனநடந்தே
குள்ளச் சிரிப்புடன் முன்னெழுந்தான் பகை
கொண்டோன் பிறநிலத்தோன்
எள்ளிநகைத்தவன் முன்னே வந்தான் அட
என்னையும் வென்றுவிட்டான்

எந்தன்நிலை கையில் வாளுமிலை அங்கே
ஏவலர் யாருமில்லை
அந்தோ மடிந்தனன் இன்றெனவே யானும்
எண்ணீய வேளையிலே
இந்த நிலையினில் ஏந்திழையாள் கணம்
ஏதென எண்ண முன்னே
தந்தமெனும் எழிற்கைகளிலே கொண்ட
தோர் சிறு வாளெடுத்தாள்

வந்தவன் செந்தமிழ்க் கன்னியிடம்தோற்று
வீழ்ந்து கிடக்கக் கண்டேன்
செந்தமிழர் தன்னை என்ன நினைத்தனை
சென்றுவிடு என்றவள்
அந்தோ அதிசயித்தே நிலை கண்டனன்
ஆகா என்னேபெருமை
நந்தவனப் பூக்கள் தேன்சொரியும் அவை
தீயும் சொரிவனவா?

மன்னவனே இந்த அன்னிய நாட்டினன்
மாறும் வேடம் தரித்தே
நின்னிடம் வஞ்சனைகொண்டு நெருங்கியே
நிர்மலமாக்க நின்றான்
இந்நிலை சொல்லவே வந்திருந்தேன் தாங்கள்
இன்னிசையில் லயித்தீர்
அந்தநிலையினில் காத்திருந்தேன் ஆனால்
ஆனால் அதற்குள் என்றாள்

நல்லது பெண்ணே உன் வீரந்தனைஇன்று
நான் எதிர்கண்டுகொண்டேன்
மெல்லியலாள் எண்ணம் வல்லவளாம் இந்த
மேதினியில் உயிர்கள்
எல்லையற்றே உருவாக்கும் பெருஞ்சக்தி
ஏற்றவளாயினும் தன்
இல்லமதில் வெகு மென்னுணர்வில் இன்பம்
ஈயும் குணத்துடையாள்

பெண்ணவள் மெல்லிய பேச்சுடையாள் அச்சம்,
பேதமை வெட்கம் கொண்டாள்
கண்மணியாய் எமைக் காத்து நிற்பாள் கணம்
கையிலும் வாளெடுப்பாள்
எண்ணமதி லின்பம்,தந்திடுவாள் இடி
மின்னலு மாகிடுவாள்
உண்மையிலே அன்பு வீரத்திலும் பெண்மை
என்றும் உயர்ந்தவளாம்

துன்பத்தில் காணும் இன்பங்கள்

இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்

எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ

தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ

பெண்ணிலையேல்.!

ஆணைப் பெண்ணையிங்கு ஏன்படைத்தாள் மனம்
ஆனந்த மேவிடும் அன்பு வைத்தாள்
வீணையின் நாத வுணர்வு செய்தா ளந்த
வேகுமுடல் தன்னில் விந்தையிட்டாள் 
ஆணையிட்டே வாழ்க்கை நாடகத்தி லவர்க் 
கேற்ற பலகுண வேடமிட்டாள்
துணை நிகர்த்தன தோள்வலிமை யெண்ணத்
தூசியென்றே அந்தமாக்கி வைப்பாள்

வானை நிலாவினை வெண்முகிலும் மழை
வந்தே மறைந்திடும் வானவில்லும்
தேன்மலர் வைகறை, தீப ஒளி ரதம்
திக்கு கிழக்கெழும் சூரியனும்
ஆனை படை அரசாளுமிள மகன்
ஆக்கி அனைத்தையும் காக்கவிட்டே
பூனை எலியுடன் காணும் பகை நிகர்
பூமியில் இம்சைக்கும் பாதை வைத்தாள்

காலை யரும்பிடும் பூவைக் கொள்ள வைத்துக்
கால்நடைப் பாதையில் முள்ளுமிட்டாள்
மேலைத் திசையினில் வாழ்வில் பயங் கர
முள்ளதென்றோ செம்மை வண்ணமிட்டாள்
சேலையணி மாதர் கூந்தலென எம்மை
சேர்த்து அறியாமை பின்னலிட்டே
ஓலைதனில் எழில் பாடுங்கவி நயம்
ஏற்ற இலக்கியம் காண வைத்தாள்

கல்லோடு கல்லை அடுக்கிய கோட்டையில்
காற்றுப் புகச்சிறு சாளரங்கள்
துல்லிய மாயொளி தூறும் நிலாவெழில்
தோன்றிட மாடங்கள் கட்டிவைத்தே
செல்லும்வழி தனில் வண்ணச்சரம் தொங்க
சிற்ப வினோதச் சிலை யரங்கம்
பன்னரும் பேரெழில் பார்த்து செய்துமென்ன
பெண்மை கலப்பின்றி ஏகாந்தமே!

அல்லன வென்றதைத் தள்ளுவதென் அன்னை
யானவளை இறை பாதிகொண்டார்
சொல்லுங்கவி சூடும் பூவைகொண்டாளவள்
சுட்டி எழில் சொலல் பாவமென்றோ
நல்ல தமிழ் எந்த நாட்டில் கொள் சேற்றிடை
நட்டநடுவே விளைந்திடினும்
அல்லி செந்தாமரை போலும் அழகினில்
ஆடிநிற்கும் அது இன்பமன்றோ !

தந்தவிழும் சிந்தைவளம்

தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை 
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ

சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ

பொன்னெனவும் மின்னுமொளி அந்தியில் மறைந்தசுடர்
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ

எண்ணமலர் கண்மலரப் பண்ணுமிளங் கற்பனைகள்
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ

கற்கைநெறி விற்றலுண்டோ விட்டகலா,, பொற்குவையாம்
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ

பாரில் வாழ்வைப் பார்


பட்டு விரிவானில் விட்டே இருள் போகப்
பார் உதயக் கதிர் பார்
மொட்டு விரிந்தது மல்லிகையும் முல்லை 
முற்றத்தில் பூத்தன பார்
சிட்டுகுருவிகள் செட்டையடித்து வான்
சுற்றிப் பறப்பதைப் பார்
சுட்டுவிடும் காலைச் சூரியன் வானிலே
செக்கசிவந் தெழப் பார்
.
சட்டசட என்று செட்டைஅடித்தொரு
சேவலும் கூவுது ஏன்
வட்ட கதிரவன் வானில் எழக் கண்டே
வாழ்த்தியும் கூவுது பார்
குட்டிப் பூனை ஒன்று கட்டைச் சுவரேறிக்
கொட்ட விழிக்குது பார்
எட்டிப்பாய மனம் இங்கோ அங்கோஎன்று
ஏங்கித் தவிப்பதும் ஏன்?
.
தட்டத் தட்டச் சத்தம் ’டும்’மென் றடிக்குது
கொட்டும் முரசொலி கேள்
திட்டி குரைத் தொரு நாய் அயல் ஓடுது
தட்டும் ஒலிக் கஞ்சித்தான்
நெட்டை மரத்தினில் நீண்டகிளையொன்றில்
நின்ற பச்சைக்கிளி பார்
எட்டிபிடித்ததில் உண்ணப்பல கனி
உள்ளது ஆயினுமோர்
.
வட்டப் பழமொன்றை வெள்ளையணில் ஒன்று
வந்து ருசிப்பதைப் பார்
திட்டம் இட்டு கிளி சென்|று கலைத்ததை
தின்ன தொடங்குதுகாண்
தட்டிப் பறிப்பது தர்மமல்ல பிறர்
தன்னை வதைப்பது கீழ்
கொட்டிகிடக்குது பூமியில் ஆயிரம்
கொண்டு மகிழ்ந்தென்றும் வாழ்!

நிலா மங்கை


செவ்வானத் தில் நிலா சிரிக்கின்றதே - அதன்
சிங்காரச் செவ்வண்ணம் ஜொலிக்கின்றதே
கொவ்வைச் செவ்வாய்க்கென்ன முன்னானதோ இதழ்
கொஞ்சும் புன்னகைத் திங்கள் எனும்போதையோ
அவ்வையின் நிழலங்கே உருவானதென் - அந்தோ
அவள்கூனல் விழிகாண முயலானதென்
இவ்வாழ்வின் எழில்பொங்கும் பொன்னூர்வலம் - இது
என்னாசைப் பெண்கொண்ட எழிலார் முகம்

பொன்னிற் செங்கோல் கொண்ட அரசென்பதா - இங்கே
பொழியும் நல் நிலவெங்கும் நுழைகின்றதா
தன்னாட்சி பெரிதென்று தரைகொண்டதா - அது
தடுமாறா ததிகாரம் பெறுகின்றதா
மென் மாதர் தனைவெலல மலர்கொண்டதா - அதை
மதனேந்தும் வில் கொண்டு எறிகின்றதா
வன் னாண்மை தனைமுற்றம் வசங்கொண்டதா - உலா
வரும்போது திருமங்கை இதுவென்பதா

சின்னவர்நல் அமுதுண்ணக் கண்ணாடியுள் - அது
சிறைப்பட்டும் விளையாடிச் சிரிக்கின்றதா
நன்நீரின் சிறுஓடை இதன்மஞ்சமா - இவள்
நடம்செய்யக் குளிர்ப் பொய்கை எனும்மேடையா
என்னாகும் அல்லிக்குத் துணையல்லவா - எண்ணி
இரவோடு உறவாட நிலம் வந்ததா
தன்னாவல் தான்மேவி தவழ்கின்றதா - அதை
தலையோங்கும் அலைதுண்டாய் உடைக்கின்றதா

என்னாகும் இறை பாதி தலைமீதிலே - அதை
இருவென்று சொன்னாலும் வருகின்றதே
பொன்வானத் திடை நீந்தும் புது அன்னமா - நிலா
பிரபஞ்சச் சாம்ராஜ்ய இள நங்கையா
மன்னாதி மன்னர்க்கு மகளானதா - அது
மதுஏந்தும் மலர்வண்ண நிகர் கொண்டதா
பின்னாலே விரிவான எழில்தாரகை - கண்டு
பேசாது விழிகொட்டும் அழகல்லவா

################

தமிழ் மகள் வந்தாள்

சொல்லென நின்றாள் சுவைமிகு சந்தச்
சோலையின் மலர்போன்றாள்
மெல்லின இடையில் மிகுவல் லினமோ
மேவிய தமிழாவாள்
வெல்லெனும் இளமை விடியலின் குளுமை
விரவிய மதுபோன்றாள்
கல்லெனும் பொருளைக் கலைஎனக் காட்டாய்
கையுளி கொள்ளென்றாள்

தொல்புகழ் தமிழாள் துணையென வந்தாள்
தெரிந்திடப் பல புகன்றாள்
நில்லெனக் கூறி நிமிரென ஆக்கி
நிழல்புதி தென ஈந்தாள்
பல்கலை அறியேன் பள்ளியிற் கடையேன்
பிரம்மனின் மறதி என்றேன்
கொல்லெனச் சிரித்தாள் குறுகுறுப் பார்வை
குலவிட விழிகண்டாள்

சில்லெனும் காற்று திரிந்திடக் கண்டு
தேரது நுழைஎன்றாள்
வில்லெனும் புருவ விழிகளைக் காட்டி
விரைந்திடு வெனப் பகன்றாள்
எல்லையுமற்ற இளமையென் தமிழாள்
ஏறிட வைத்தென்னைத்
துல்லிய வானில் திரிகிற மேகத்
திசையினில் போகவிட்டாள்

சல்லெனும் ஓசை சங்கீத ராகம்
சற்றெழும் வேளையிலே
செல்கின்ற பாதை பொன்னென ஒளிரும்
சிறப்பைக் கண்வியந்தேன்
புல்லதன் பச்சை பொலிகடல் நீலம்
புலர்வான் செந்நிறமும்
பல்வகை வண்ணம் பனிநீர் குழைத்தே
பார்வையால் தீட்டிவைத்தாள்

இல்லமும் வரைந்து இளவெயில் மரங்கள்
இடையினில் நீரோடை
நல்லிளம் பூக்கள் நாறிடக் கிளர்வும்
நகையென முகைஅவிழ
சொல்லினைத் தேராய் சுந்தரத் தமிழைச்
சுவைபடக் கோர்என்றாள்
மெல்லிய உருவம் மிகஅதிவிடியல்
மிளிர் ந்திடும் சுடர்போன்றாள்

கல்லினைக் கண்டேன் காரிகை உருவம்
கல்லினுள் காண்கின்றேன்
மெல்லென விடியும் வேளையிலெங்கும்
மேவிடும் கலை கண்டேன்
சில்லெனும் தென்றல் தழுவிடக் கையில்
சிறு கூர் கோலெடுத்தே
நெல்மணிக் கதிராய் நிறைவெழக் கீறு
நினைவெடு கவிதை யென்றாள்

முல்லையும் வண்டும் முன்னெழு பனியும்
முழு நிலவின் ஒளியும்
தொல்லையில் சூழல் சுதந்திர உணர்வு
தோன்றிட வழிசெய்தே
நல்லவை கூட்டிநனி தேன் தமிழில்
நடையெடு சொல்லென்றாள்
வெல்லமென்றாக்க விழை எனக்கூறி
விடியலில் ஒளி யானாள்

=================

இவளும் அவளும்

(ராமன் தேடிய சீதை)

காலங்கள் காண்வழிக் காலைகள் பொன்னொளி 
காணப் புலர்ந்தனவோ
கோலத்தில் பெண்ணெனும் கோடி எழில் கொஞ்சும் 
கோதை என்னாயினளோ
ஞாலத்திலே தமிழ் பெண்ணென் றிலக்கிய
நங்கை பல வகுத்தார்
வேலை வில்லம்பினை வைத்து மனம் கொல்லும்
விந்தை மகளின்றெங்கே

காவியமும் தமிழ்கூறும் கதை இன்னும்
காணு மிலக்கியங் கள்!
ஆ..வினோத எழில் அற்புதம் மேவிய
ஆரணங்கைப் படைத்தார்
ஓவியத் தூரிகை வண்ணங் கொள்ளா தெழில்
ஊட்டிய பொன்மகளாம்
பாவி இதயத்தில் கீறிவைத்தே பல
ஆண்டுகள் தேடுகிறேன்

கோவலன் யானெனில் லீலை புரிந்திட
மாதவி தேடுகிறேன்
காவலன் பொய்யெனில் நாட்டையழித்தவள்
கண்ணகி காணுகிறேன்
தேவதையோ எனும் தூய மனம் கொண்ட
சீதையைத் தேடுகிறேன்
ஆவதை செய்யென்ற இராவணனின் தங்கை
அன்பினைக் காணுகிறேன்

பாவலனாகியும் பாட்டமைக்க அதைப்
பாடிக் களித்திடுவாள்
நாவளம் கொண்டெவர் பாடிடினும் அங்கு
நாட்டிய மாடி நிற்பாள்
தாவ நிலம்துள்ளத் தந்தனதோம் சொல்லி
தான் நடமென்பதல்ல
ஆவல்கொண்டே மன நாட்டிய மேடையில்
ஆடிக் களிப்பளுண்டோ

பேரரும் நன்னெழில் பெண்ணி னிலட்சணம்
போற்றிய நூல்கள் கண்ட
சாரமுடன் உடல் வாகினில் பத்தினி
சித்தினி தேவையல்ல
போரதின்றிச் சிறு பிள்ளை மனம் கொண்ட
பெண்ணின் மிருதுகெடா
தூரமும் அன்பினைக் வைத்துநிற்கா நல்ல
தூயதோர் மங்கையுண்டோ

காவியம் கூறும் சகுந்தலையும் நளன்
கண்ட தமயந்தியும்
தேவி திருமகள் கொள்ளழகும் எமன்
தோற்றிட ஆவி கொண்டாள்
சாவித்திரி போலும் சற்றே பெண்மைகொண்ட
சாயலுடன் திகழும்
பூவிரியும் மதுகொள்மலர்போல் ஒரு
பெண்ணினைத் தேடுகிறேன்

தண்மையில் பொய்கை குளிரெடுப்பாள் தினம்
தாமரை போல் சிரிப்பாள்
விண்ணிடை ஞாயிறு வந்துவிட்டால் இதழ்
வெம்மை கண்டே நெகிழ்வாள்
பண்ணும் கிரிகைகள் பாதகமின்றி மெய்
பாசத்துடன் திகழ்வாள்
எண்ணும்மனம் எந்த வேளைசினமின்றி
இன்ப உணர்வு கொள்வாள்

(இன்றைய காணும் சின்னத்திரை பெண்கள்)

வாயுரம் கொண்டவள் வார்த்தை கசப்பதும்
வாழ்வில் வலிகொடுத்தே
தாயுறவென்னும் தரமிழந்தே வெறும்
தன்னலம் கொண்டவளாய்
பாயுமலை எழுந்தோடும் சுனைஒன்றில்
பார்க்கும் இலையில் தண்ணீர்
மாயமென்றே உருண்டோடும் நிலைகொண்ட
மங்கையைக் காணுகிறேன்

கன்னத்தில் முத்தமிட்டே கதைபேசிடும்
காரிகை யாயிடினும்
வன்மை யுரம் நெஞ்சில் நஞ்சு பரந்திட்ட
வஞ்சம் விளைவதென்ன
தன்னலமும் தனதாளுமை கொள் ளகங்
காரமும் நெஞ்சில்கொண்டே
என்ன எடுப்பினும் நின்றெதிர்க்கும் ஒரு
ஏந்திழை காணுகிறேன்

பெண்ணினம் ஆவல் கொண்டே மனம் அத்தகை
பேசும் படங்கள் கண்டே
கண்ணிடை நீர்பெருக் காகி வழிந்திடக்
காட்சியோ டொன்றுகிறார்
மண்ணிடை மாதர் இழிந் தவர் என்பதை
மன்னித்தே ஏற்றுவிட்டார்
தண்மைமனதும் விகாரமுற்றே எண்ணத்
தாழுணர் வாகிவிட்டார்
...........................................

இந்த வாழ்க்கை

நீள உயர்மரக் கொப்பினிலே - கரு
நீலக்குயில் ஒன்று பாடியது
தாளமிடும் சுனை பக்கத்திலே - அலை
தென்றல் வருடியே ஓடியது
பாளமெனும் தங்கம் போலும் நிலா - பனி
போர்க்கும் மலையதன் பின்னேவர
ஆழக் கிடந்த மண்பூமியிலே - சேற்றில்
ஆடிநெளிந்தங்கே வாழும்புழு

கீழத்தரையொடு நின்றபடி - அந்தக்
கானக் குயிலினை கேட்கின்றது
வாழக் கிடைத்த கருங்குயிலே - உன்றன்
வாழ்க்கையில் எத்தனை இன்பமுண்டு
சூழப் பறவைகளோடு நீயும் - நற்
சு-தந்திரமாகவே சுற்றுகிறாய்
ஆழப் புதைந்திருள் மண்ணுக்குள்ளே - வாழ
ஆன உடல்எனக் கேன்வந்தது

நீல உயர் வெளி வானத்திலே - நானும்
நின்னைபோலும் பறந்தோடிவர
கால காலமாக ஆசை கொண்டேன் - ஆயின்
காற்றிலேறும் விதம் கற்றறியேன்
வாலைகொண்டாய் இரு(இ)றக்கைகளும் - உன்னை
வானில் செலுத்துவை தானறிவேன்
நூலை போலும் ஒரு தேகம்கொண்டேன் - எந்தன்
நெஞ்சம் துயருறச் செய்தவர்யார்?

(குயில்)
காரணம் ஏதென நானறியேன் - இதற்
கானபதில் தனும் நான் உணரேன்
தோரணங்கள் போல வானிலெங்கும் - தொங்கும்
தூய ஒளிர் கதிர் தொட்டில்களை
பாரதையும் செய்த சக்தியதே- இங்கு
பார்த்தெம்மில் பல்வகை தேகமிட்டாள்
யாரங்கே யாரிங்கே என்பதெல்லாம் - அந்த
 ஞாயிறைச் செய்தவள் ஞானமன்றோ

ஆழிதனைப் பெரிதாயமைத்தாள் - அதில்
ஆடும் கடற்திரை ஓடவிட்டாள்
சூழின்பத் தென்றலும் தொட்டுவிடா - அலை
துள்ளும் கயலினம் உள்படைத்தாள்
வாழிர் எனமாந்தர் இங்கமைத்தாள் - ஒரு
வட்ட வரையின்றிச் சக்திதந்தாள்
ஏழில்குறைத்தொரு புத்திதந்தாள் - அதை
ஏற்றபடி அங்கும் இங்குமிட்டாள்

நல்ல மலர்களை வாடவிட்டாள் - வெறும்
நஞ்சுடை கள்ளிக்கு முள்ளுமிட்டாள்
கொல்லும் வன விலங் கெங்குமிட்டாள் - இங்கு
கூடும்மாந்தர் மனதுள்ளும் வைத்தாள்
வல்லமை கொண்ட மனம்படைத்தாள் - அதை\
வாரி மகளிர்க்கு தந்துவைத்தாள்
செல்லும் மிடமெங்கும் பூ உதிர்த்து முள்ளைச்
சேர்த்து இறைத்தவள் தானறிவாள்

(அப்போது சிறு தொலைவில் இருக்கும்
வயலில் உழுதபடி ஒரு மனிதன் பாடுகிறான்
(வேறு)

ஆசை கொண்டு தோன்றியதே தேகம் - அது
ஆக்குந் துன்பம் எல்லையற்ற சோகம்
தூசை யொத்த தாயுடலும் போகும் - இதில்
துள்ள வைக்கும் இரத்தம் காய்ந்து வேகும்
வாசமுள்ள பூவும் நாளில் வாடும் - அதில்
வந்திருந்த வண்டு ஓடிப் போகும்
பாசம் கொண்ட தாயிருந்த போதும் - உயிர்
பட்ட துன்பத்தில் விலகக் காணும்

யாருக்கிந்த மண்ணின் ஆசை கூடும் - அது
யாக்கையில் உயிர்பறித்தும்போடும்
நீருக்குள்ளும் வேலிபோட்டு காக்கும் - அந்த
நீசமிக்க தாக எண்ணம் ஆக்கும்
பாருக்குள் இவர்கள் வாழ்வுமீண்டும் - ஓர்
பக்குவ மெடுத்து மேனி கொள்ள
வேருழும் புழுக்களாக ஆவர் - மண்ணில்
வேட்கை கொண்டலைந்த பாவிமாந்தர்

பேருக்கும் புகழ் என்றன்றி நன்மை - பல
பேசரும் வகை விளைத்த மாந்தர்
காருக்குள் ஒளிர்ந்த தீபம் போலும் - இன்னும்
காக்கும் வாழ்வுயர்ந்த பண்பும் சான்றும்
சேருமுள்ளம கண்ட அன்பு வாழ்வும் - அவர்
செய்த நன்மைகள் மரத்தின்மீது
சாரும் வான் பறந்த பட்சி யாகும் - உயர்
செல்லும் புள்ளினங்க ளாகக் கூடும்

(கற்பனை)

நானும் பூவும்

தோட்டத்தில் நின்றது ரோஜாச்செடி - அதில் 
துள்ளி எழுந்ததோர் பூமலர்ந்து
நாட்டத்தில் மென்மையை நான்ரசிக்க - அது 
நாறிக் கவர்ந்ததோ வண்டிலொன்று
கூட்டத்தில் கொண்ட கு தூகலமோ - மது 
கொண்டு களித்தபின் வண்டெழுந்து
ஓட்டத்தில் சென்றது பூவிருந்து - வாடி
ஓரத்தில் வீழ்ந்தது நாளிலொன்று

நீட்டத்தில் நானும்பின் திண்ணையிலே - உடல்
நீளக் கிடந்தவன் எண்ணத்திலே
தேட்டத்தில் என்னவோ தேன்நிறைந்தும் - அதைத்
தின்னக்கொடுத்தது வீணனுக்கு
பாட்டில் கிடக்குது பாராயிப்போ - அது
பட்டு விழுந்திடல் பாவமன்றோ
வாட்டிக் கருக்கும் தன் வாழ்வறிந்தும் மலர்
வண்டை அழைத்துண்ண விட்டதென்ன

பூவும் சிரித்தது பார்த்தெனையே - அட
போடா மனிதா உன் புத்தியென்ன
நாவும் நல்லோசையும் கொண்டுமென்ன - உந்தன்
நாறும் உடல்தரும் நன்மையென்ன
ஏவும் செயல்கொண்ட தின்னாதவை - இன்னும்
ஏழைசெல்வம் எனும் இரண்டுவகை
யாவுமொரு தினம் வாழ்ந்திடினும் - எங்கள்
ஞானம் சிறித்தேனும் உன்னில் உண்டோ

ஏட்டில் எழுதிப் படிப்பதொன்று - பின்னர்
எட்டியிடிப்பது கோவில் கண்டு
நாட்டில் நடப்பது ஏதுநலம் - செய்கை
நாலுவிதம் கரும் புத்தி கொண்டு
போட்டி பொறாமையும் வஞ்சமென - நீவிர்
போடும்மனவேடம் புத்ததவம்
வேட்டையாடுவதும் உன்குலமே - அந்த
வேஙகை அரிவேழம் வீழ்வதல்ல

கேட்ட பொழுதினில் ஈய்வதில்லை - அன்பு
கேடு தரும் வாழ்வு இன்பமில்லை
மீட்ட நினைந்து கை வீணைகொண்டால் - அங்கு
மென்னிசை யன்று முழக்கங்களே
தீட்டினைக் கொண்டுமே காணுகிறீர் - நீவிர்
சேர்த்தது இச்சையும் மோகமும்காண்
சாட்டுங் கை குற்றமும் அன்னியரை - உமைச்
சார்ந்தவை பொய்யுடன் சூதுவகை

நாட்டினி லெத்தனை பூக்களுண்டு - வரும்
நல்ல மணம்பல வண்ணம் வேறு
கோட்டினின் எல்லையைத் தாண்டவில்லை -நாமும்
குற்றம் கொடுமைகள் செய்வதில்லை
ஆட்டிச் சுழலிடும் பூமியிலே - எங்கள்
ஆயுள் குறையினும் பூமலர்வில்
கூட்டிகொடுப்பது இன்பம்மொன்றே - எங்கள்
கொள்கை மேன்மை இதைக் கேள்மனிதா!

ஏன் மனதே தொலைந்தாய்

மாமரத்தில் துங்கும்கனி மஞ்சள் வெயில் மாலையிருள்
மல்லிகையைத் தொட்ட தென்றல் மாறிவிடாதோ
கா மலர்ந்த பூவைவிட்டுக் காற்றினித்த கனியணைந்து
காணும் மணம்காட்டிடையே காவிவராதோ
தேமதுரக் கூட்டில்நிறை தேன் வழிந்தே ஊற்றுதெனத்
திங்கள் ஒளி காட்டுங் கவி தேனழையாதோ
பூமதுவைத் தேடு தும்பி புன்னகைக்கும் பூவைவிட்டு
போம்பழத்தி னூடுதுளை போடுதலேனோ

நானழுதும் நடைபழக நாடு ஒருதேசமில்லை
நாலனிலமே காடுஎனில் நலிந்திடும் தூக்கம்
கூனெழுமோர் விழி புருவங் கொண்டு கணை எய்பவளை
கொல்ல வருஞ்சேதி கண்டு கூடுது ஏக்கம்
கோனெழுந்து நடைபயிலக் கோடிஉயிர் போகுமெனில்
கொள்ளுவதென் நீதிதனும் கொண்டதோ தூக்கம்
வானெழுந்த மேகமென வாழ்வில்பெருஞ் சுதந்திரத்தை
வந்துவிதி மாற்றும்வரை வார்த்தையில் தேக்கம்

பாவெழுதிப் பாடும்வரி பாரில் ஒருமாற்றமில்லை
பாவம் வளர்ந் தோங்க மனம் பட்டது தாக்கம்
தீவிழியில் தோன்றும் வகை தினகரனினொளி குறைந்து
தேகமதை தீய்க்கும் சுடர் தெரியுது ஏற்றம்
ஓவெளியில் கால்நடந்து உற்றவழி காணும்வரை
உள்ளமதில் தேன்கனிந்து ஊற்றிடும் வாழ்வும்
மாவிலங்கு தானொடிந்து மங்கைமனம் தான்குளிர்ந்து
மானமுடன் வாழும்வரை மறைநிலா மேகம்

சொந்தம்

உள்ளத்தை ஏன் உள்படைத்தனை சக்தி - அதில்
உள்ளதென் னெனத் தெளியவில்லையே புத்தி
அள்ளுவதென் தள்ளுவதென் அறியா - நானும் 
ஆசையிற்பல் லாண்டு வாழ்ந்தனன் சொகுசா
கொள்ளென் றிவைகள் நீ கொடுத்தனை சக்தீ - நான்
கொட்டியதைக் கோர்த்தளித்திட்ட புத்தி
நள்ளிரவோ கண்மறைத்திடக் காப்பாய் - என்
நாளும் அன்பினில் புன்னகை பூத்திடுவாய்
சொல்லெடுத்ததை ஆக்கிவைத் திடசெய்தாய் - அதைச்
சொந்தமென்றிவன் சொல்வது மில்லை அறிவாய்
நெல் வயல் கொள்ள விதை விதைத்தவன் பின்னே - அங்கு
நின்றசை கதிர் நீபடைத்ததென் றுணர்வான்
நல்ல தென்றவை நினைவில் தந்தனை கருவாய் - அதை
நானிலமதில் நானளித்தது பொதுவாய்
இல்லை யென்றிவன் ஆவதுமோர் காலம் அப்போ
எவர் எதைக் கொளக்கூடுமோ இப்போதும்
கற்றதென்னவை காலம் தந்திட்ட பாடம் - அதில்
கற்பனைகளும் காணும் வண்ணங்கள் பூசும்
நற்பணியென நான்நினைத்தது தமிழே - இந்த
நட்சத்(தி) ரங்களைத் தொங்கச் செய்தனன் அழகே
பற்றி மெய்யினில் தீ பரவிட ஓர் நாள் - அன்று
பற்றும் அன்பெனும் பாசம் பொய்த்திடும் போமாம்
உற்றதொன்றிலை உலகம் மறத்தல் வாழ்வே - என்
உள்ளம் கொண்டவை மறைவதில்லை வாழ்வே!
வந்துமெய் விழும் பூச்சரங்களைக் கொண்டேன் - பக்கம்
வைத்தபின்னொரு புன்னகைகொண்டு நின்றேன்
அந்தமென்பது யாவரும் கொள்ளும் காலம்- அதில்
யாக்கை இன்பமும் கெட்டு நொந்துடல் வீழும்
வந்துமென் விதி நெய்விளக்கினை ஏற்றும் - அதில்
வைத்த மென்விரல் சுட்டதென்றுள்ளம் வேர்க்கும்
சிந்து கொண்டிசை பாடுவர் குரல் கேட்கும் - மனச்
சித்திர உணர் வெங்கிருந் ததைக் கொள்ளும்?
கல்லெடுத்தவன் சிலைவடித்திடக் காண்போம் - நம்
கற்பனைகளும் சிறகடித்திடும் காலம்
நன்னினைவுகள் கொண்ட துள்ளமும் காணும் - விதி
நயனமென் னிமைவிரித் ததனையும் பார்க்கும்.
அல்லல் கொண்டலலை மேனி கணக்குப் பார்க்கும் - அதில்
அன்பு கண்டவர் விழி துளிகளை ஊற்றும்
இல்லையென்பது இறுதிப் பக்கம் சேரும் விதி
ஏட்டில் முற்றுமென் றிட்டொரு புள்ளி மூடும்.

Saturday 23 May 2015

புத்தாண்டு 2015

 
மங்கல ஓசை எழுந்துவர 
  மங்கையர் கள் நடமாடிவர
சங்கு ஒலித்திடும் சத்தமெழ 
   சாய்ந்து மரங்கள் சலசலக்க
பொங்கும் தமிழிசை காதில்வர 
   பொய்கை இளந் தென்றல் வாசமிட
எங்கும் மணியொலித் தின்பமெழ 
   ஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ள

வெங்கனல் வீசிடும் நீதியெழ 
   விட்டெழுந்து தீமை ஓடிவிட
தங்க ஒளிநிலா ஊற்றிவிட 
    தந்தன தந்தன தாளமெழ
சங்க தமிழிசை சந்தமிட 
    சார்ந்து குயிலிசை கானமெழ
செங்கனி கொண்டதை தேனழைந்து 
    தின்னவென பெண்கள் தந்திருக்க

மங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில் 
    மாறி இருள் போர்வைமூடிவிட
அங்குமிங்கும் வண்ணம் பூசியதாய் 
    ஆக்கும் வண்ணஒளிக் கோலமிட
பொங்கி விரிவன பூச்சரங்கள் 
    போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்
தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலே 
   தந்திடப் புத்தாண்டு வந்ததுவோ

வெள்ளி முளைத்து விடியுதென 
   வேண்டுவர் வாழ்வில் உதயமெழ
புள்ளியிட்ட மானும் துள்ளுதெனப் 
   பூவையர் சின்னவர் ஆனந்திக்க
அள்ளி யணைத்திடத் தாயவளும் 
    அன்புகொண்டதந்தை கூடிநின்றே
உள்ளமதில் பெருஆனந்தமும்
    உண்டு செய்யுமோ புத்  தாண்டுமிதே!

..............................
 

பொங்கல்



பொங்கட்டும் செங்குருதி புல்லர்களின் செயல்கண்டே
பொங்கட்டும் வெஞ்சினமும் பேடியரின் போக்கெண்ணிப் 
பொங்கட்டும் மக்கள் நலம் புதுவெண்ணம் புதியவழி 
பொங்கட்டும் புத்துணர்ச்சி போகட்டும் சோம்பல்தனும்
மங்கட்டும் மாயமெனும் மதிபிறளும் வெறியுணர்வு 
தொங்கட்டும் தோரணங்கள் தூய தமிழ்வீதியிலே
எங்கெட்டும் வாறிந்த இன்தமிழின் சுதந்திரத்தை
நன்கொட்டும் முரசினொலி நாலுதிசை காவாதோ

பெண்கட்டும் பூம்பொதியில் பிறந்துவளர்ந்.தோ முயிரை
மண்கொட்டும் உடலிட்டு மாமனிதஉருப்பெற்றோம்
வெண்பட்டும் போலழுக்கில் வீழாது மெய் காத்தோம்
புண்பட்டும் போகவென புல்லர்களின் செயலாலே                                                      ]
எண் கெட்டுப்போ எனவே ஏராளாமாய் இழந்தோம்
தண்குட்டை நீரினிலே தவிக்கின்ற மீனினமாய்
கண்கெட்ட வகையாகி கடுமிருட்டில்நடக்கின்றோம் 
விண்ணெட்டும் வகை இன்பம் விளைவதெப்போ விடைகூறு

இங்கெட்டும் வரை எங்கள் இன்பம் தழைத்திடவும்
திங்கட்கும் இல்லாத தேமதுரசுவை கொண்டு
திங்கட்கும் ஒளியீந்த செம்மலவன் ஒளிதாங்கி 
திங்கட்கும் பின்நாளில் தேனிசைக்கும் தமிழ்பாடி
திங்கட்குள் முன்னோனின் திருநாட் தினமொன்று
எங்கட்கும் வாராதோ இல்லாத மண்மீட்டு
தொங்கட்டும் தூயதமிழ் சுதந்திரக் கொடிபறக்க
சங்கிட்டும் முரசொலிக்க சேதிவான் எழுமாமோ

வெற்றியென் றொலிக்கட்டும் வீரத்தில் புதுப்பானை
பெற்றவராய் விடுதலையும் பெற்றின்பத் தீமூட்டி
முற்றிலுமெம் சுற்றமுடன் மற்றவரும் ஒன்றாகிக்
கற்றவரும் கன்னித்தமிழ் கல்லாக் குடிமகனும்
குற்றமற்ற தாயிருக்கக் கொடுமைசெய் பழிநீங்கி
விற்றுப் பகையுணர்வை வீறுடனே தமிழ்காத்த
அற்புதமென்றோர் காலம் ஆகாதோ அந்நாளில்
நற்றமிழின் சுவைபொங்க நாமுண்ண மாட்டோமா?
***********************************************

திங்கட்கும் -- தின் கள்ளுக்கும் (தேனுக்கும்)

திங்கட்கும்  --- சந்திரனுக்கும்

திங்கட்கும்  -- திங்கட் கிழமை--

திங்கட்குள்  -- மாதங்களுக்குள்

Thursday 21 May 2015

யார் கொடுத்தார் ?


கொட்டிவைத்து மின்னுஞ்சிறு தாரகைகளை - வானில்
கெட்டியாக ஒட்டிவைத்து விட்டவர் யாரோ
முட்டி இடிமேக மழை கொண்ட மின்னலில் - ஒளிக்
கட்டி நிலா தான்பிடித் துருட்டி வைத்தாரோ 
வட்டநிலா அந்திவேளை எட்டிப் பாரென - முகில் 
முட்டவொரு மாமலையும்  கட்டிவைத்தாரோ
ஒட்டுரசி ஓடிவரும் வெண்முகில் கூட்டம் - அதை
விட்டு நிலா பஞ்சணையில் தூங்கச் செய்தாரோ 

கட்டழகு ஓவியமாய் காலைவானிலே - அந்த
கண்கவரும் காட்சிஎழில் தீட்டியதாரோ
மெட்டுநெகிழ் மென்மலரைக் கட்டவிழ்த்தாரோ - அதில் 
மோகமெழும் வண்டினத்தைத் துய்க்கவிட்டாரோ
தொட்டிழையும் தென்றலினால் பட்டுமேனியில் - இதழ்
தொக்கும்மலர் பட்டசுகம் கிட்டவைத்தாரோ
தட்டிஉளி கற்சிலைசெய் சிற்பியின் கைபோல் - விரல் 
தாங்கும் வீணைநாதம் மீட்டல் தந்ததும் யாரோ

வட்ட அலை நீர்க்குளத்தில் ஆடும் தாமரை - அதை 
விட்டெழுந்த பட்சி யோடிப் போம் வயற்கரை
தொட்டுவிட வான்சரிந்த தூரத்தோற்றமும் - மழைத்
தூறல் தந்ததேக்க நீரில் வீழ்ந்த வானமும்
கட்டைப் பசும்புல் வெளியில் பச்சை பூசியும் - பல 
கற்பனையின் அற்புதங்கள் செய்வதும்  யாரோ
சுட்டவெயில் நீர்தெளிக்கும் சின்ன வான்முகில் - கண்டு
சொல்லிஏழு வண்ணமிட்ட வில்லமைத்தாரோ

விட்ட துளி வானிறைந்து கொட்டியதேனோ - அது
அட்டகாச மிட்டதிரச் சத்தம் இட்டதோ 
பட்டு விழுந்தோடி மண்ணில் பாயுது வெள்ளம் - அதைப் 
பக்குவமாய் ஓடவழி பார்த்த மைத்தாரோ
நட்டமரம் நீளுயரச் செய்தவர் யாரோ - அதில் 
நட்சத்திரப் பூக்களினைத் தொங்கவிட்டாரோ
மட்டுமல்ல பூமலர்வில் வாசமிட்டவர் - அதில்
மாலையிளங் காற்றெடுத்துமயக்க விட்டாரோ

பட்டுவண்ண மேகமிட்டுப் பக்குவஞ்செய்து - அதன் 
பால்நிலவும் கூர்கதிரும்  பார்வைதந்திட
வட்டமெனச் சுற்றும்புவி செய்தவர் யாரோ - அவர்
வாழ்க்கைஎனும் சக்கரமும் சுற்றவைத்தாரோ
தொட்டிலாடும் பிள்ளையாகித் தோல்சுருங்கிடும் - இந்தத்
தோன்றலென்ற மானுடத்தை கட்டியாள்வரோ 
ஒட்டிஉடல் உள் நின்றோடும் இரத்தமோர்நிறம் - ஆயின் 
உள்ள தோற்றம் வண்ணபேதம் வைத்துவிட்டரோ

எட்டியடி போடுபவன் ஏய்ப்பவன் தன்னை - நீ
இத்தரையில் வாழு என்று இன்பமிட்டாரோ
பட்டிதொட்டியெங்கும் பகை பாய்ந்திடச்செய் தும் - அப்
பாவிகளை இம்சைசெயப் பார்த்திருந்தாரோ
கெட்டமனம் நல்லகுணம் கேடுகள் நன்மை - இவை 
கொட்டி புவிமக்களிடை தூவிவிட்டாரோ
நட்டமென வாழ்வின்வினை நாசமும்செய்து - அதில்
நன்மைகொண்டு வாழ நாலுபேரைவிட்டாரோ

சட்டமெலாம் செய்பவரின் பக்கம்நின்றாரோ - அதில் 
சற்றுமுலாம்பூசி மெய்யில் பொய்யொழித்தாரோ
கட்டிஉடல் தீயிலிட சுட்டெரிப்பாரோ - அதைக்
காவலென்று பேருமிட்டு காத்திடுவாரோ
வெட்ட வந்து கொட்டுதிரம் வேட்கை கொள்பவர் - பொய்யை 
விற்றுப் பல இரத்தினங்கள் கொள்ள வைப்பாரோ
கட்டழகே பொற்தமிழே காணும் இன்னலை - நின்றன்
கையளித்து விட்டவர்கள் யாரெவர் யாரோ

வட்டியுயோடு வாழ்விற்துயர் கொட்டவைப்பாரோ - அதில்
வந்துசில பேரைமட்டும் எட்டவைப்பாரோ
இட்டமுட னாடி என்ன பாவம் செய்யினும் - இந்த  
ஏழைகளை நீசமிட்டுத் தாழ்வு செய்யினும
குட்டி மிதித்தேறி அவர் கொல்வராயினும் - அது
குற்றமிலைக் கொள்ளிறைமை கோட்டுள் என்பரோ
விட்டுமனம் வேகிநின்றே நானும்கேட்கிறேன்  இந்த
விந்தையோடு வேதனைகள் யார் கொடுத்தார் யார் ?

’’’’’’’’’’’’

அழகு உலகம்


தேயாத முழுமதியின் திகழ்வானத் தெழிலும்
திரிகின்ற முகில் விலகத் தினகரனின் ஒளியும்
காயாத புல்வெளியும் கனிதருமா மரமும்
கனல் மேவுங் கடும்வெயிலில் காண்நிழற் சோ லைகளும்
பாயாக விரியழகுப் படர் கடலின் திரையும்
பாய்ந்து விழும் மலையுச்சி பிறந்தவளாம் நதியும்
தாயாக இயற்கை அன்னை தரும் உலகின் அழகே
தனை மறந்து மனம்மகிழத்  தகுமியற்கை எழிலே

நேராக நிமிர் தருவும் நீட்டியதோர் கிளையும்
நின்று குரல் தந்தினிக்க நெஞ்சிணையும் கிளிகள்
கூரான ஏர் துளைத்துக் கொத்தி மண்ணை உழுது
கொட்டியபொன் தேறுமெனக் கொள் பயிரும் காணத்
தீராத நாணமுற்று தலை குனிநெற் கதிர்கள்
தென் திசையின் காற்றணைக்கச் சல சலக்கு மழகே
வேராக நாட்டில்வளம் விளைக்கு மிடம்தானும் 
வெகு வனப்பே அழகிலிது விலைமதிக்கா வகையே 

தேராக அசைந்துவரும் தேவதையோ பெண்ணில்
தினம் ஒளிரும் அழகுதனும்  தேர்வினி லோர்வகையே
நாராக மலர் தொடுத்து நறுமணத்தில் மாலை
நாம் வணங்கும் தெய்வ மிட நேர்வதும் ஓரழகே
தாராத இன்பமுடன் தென்றல் வந்து நீவும்
தண்பொழில் நீர் துள்ளும் கயல் தாமரையின் பூவும்
சேராது நீருருளச் செய்யும் அதன் இலையும் 
சொல்லின் எழில் மேதினியில் சிறப்புடைத்தன்றோ

வானாற நடைபயிலும் வளை முகிலின் ஓட்டம்
வந்திடையில் மின்னுகின்ற இடிமழையின் தூறல்
பூநாற மலர் தேடும் புள்ளினமும் வண்டும்
போகு மெழில் வான்பரப்பில் புள்ளியெனக்காணும்
வீறாக நடைபோட்டே விரைந்து காளை ஓடும்
வெகுண்ட யலில் இருந்தஒரு வான்குருவி ஓலம்
ஆநூறாய் அற்புதங்கள் ஆக்கியதார் உலகில்
அழகு தனும் இயற்கையதன் அழகு பெரும் அழகே

*******************

மாறும் இயல்போ


மலை போலும் நிலைகொண்டு
.. மாறாது எதுதானும்
.. மாவுலகில் நிலைப்பதுண்டோ
கலை கொண்ட வாழ்வதிலும்
. காணுபவை எல்லாமே
.. கரைகாணும் வரை நிற்குமோ
அலை என்று மனம்கூறி
.. ஆக்கியதோ இந்நாளில்
.. அக்கரை பச்சை யென்றே
நிலைகொண்டு திசை மாறின்
.  நீதியிலை எனநீயும்
.  நெஞ்சமே அழுவதேனோ

தலைகொண்ட விதியென்று
.  தகுதிக்கே ஒவ்வாத
..  தரம்காண ஏற்றும் விதியே
விலையென்று வகைகூறி
. விற்கவெனப் பொருளீந்து
. விற்றபின் வேண்டிநின்றால்
குலையென்றே ஒன்றாகக்
. கூட்டாக வாழ்ந்தும்பின்
. கூறாமல் விட்டும் ஓடும்
நிலைகொண்ட வாழ்வுமிது
. நெஞ்சமே  நீ ஓடும்
. நிலை தன்னைக் குறை கூறவோ

சிலையென்று கணம்தானும்
. செய்வதும் அறியாது
. சிந்தனை மருகி நின்றே
உலையென்று கலைபேசும்
.  உள்ளமென்ப தோய்வின்றி
.  உலகெங்கும் தேடிஓடி
இலையென்றும் ஆனபின்னே
..  இருப்பதுமென் இல்லாமை
.  இருப்பதே இயல்பொன்றாக
தொலை தூர அடிவானில்
.  திகழும் அனல்கூடும்வரை
.  திடமும் கொள் எந்தன்மனமே

விதியும் மதியும்


நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் 
  நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும்
பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு
  பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும்
நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும்
  நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும்
குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து 
  குமைந் தழியுமவ் வேளையில் ஒளிவேண்டும்

மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம்  
  மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும்
புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும்  - அங்கு
  பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும்
முதிர் அலைசுனை தனில்சல வென ஓடும் -  ஒளி
  முகமதில் நதி யெனப் புரளு முற்சாகம்
கதியிழந்த தன்  நிலை திரிந்திடும் போதும்  - அங்கு
  காண் மனதிடை ஓங்கிடும் பெரு ஞானம்

அறிவென்ப தெது மனதிடை எழும்சூர்யன் -  அது
  எழ விடிந்திடும் இருள் மறைந்திடும் வாழ்வும்
நெறிகொளும் நெஞ்சில் நிறைவொடு வரும் காலம் -அது 
  நெடுவிரி பெருவானிடை  அளவாகும்
குறிகொண்டு பெரும் அறிவெனும் இறைதானும் - இந்தக்
  குவலயமதில் நினை அறிவினை ஈயும்
பொறிமனதினில் உணர்வுகொண் டுமெந் நாளும் - நீ
  பொலிந்திடும் சுகம் வேண்டி நில் கரம் சேரும்

அறியென மனங்  கூறிடு மொளிதானும் - அந்த 
அருள்தரு மொளி பெரிதெனும் சக்தியாகும்
பொறி பறந்திடும் எரிமலையதன் வேகம்  - இன்னும்
புதுமலர் பெறும் எழிலெனும் மெருகோடும்
எறிதுளிவிரி பேரலை யெழும் ஆழி - அதில்
ஒளிபட அலைமினுங் கிடும்  எழிற்காட்சி
அறியிவை செயும் அருங்குணம் கொண்ட ஆட்சி - அது
அகிலமென் னுமிந்  நிலமிடை வருங்காட்சி

உயிர்தனும் எமதுடலுட னொன்று சேரும் -  நிலை
  உணர்வெனு மொருசூடெழு மசைவாகும்
பயிரென வளர்பாங்குடன் எமையாக்கிப் - பின்
 பறித்திடும் வரை நடந்திடும் செயலாற்றி
வயிற்றிடைப் பசி வெந்திடும் தீயூற்றி -  அதை 
  வழிந்திடும்தேன் சுவைகனி கொண்டும் ஆற்றி
கயிறென அன்புக் கட்டிட ஊஞ்சலாட்டி - அதில்
 கனவொடு  வாழ் கணி எனும்  நிலையாக்கி

ஓளியென நமதறிவினை மிஞ்சும் அறிவே - அந்த 
  உயர்வெழு பெரு வெளி யெனும்பிர பஞ்சம் 
ஒளிர்வது திண்ணம் உள்ளிடை அன்புகொண்டே - அதை
  உயிரென நினை ந்தெழு தொழு நிதமென்றும்
களிகொள்ள நின தரிதெனும் புவி வாழ்வில் - அருள்
   கரம்கொடுஎன  தரும் வரமதைக் கேட்டால்
ஒளிபெறும் நல முயர்ந்திடும்  புகழ் ஞானம் - உடன்
  ஒருபெருமறி வெனும் இறை வரம் நல்கும்

**********

அழகானது



வனைந்த கலயமும் உடைந்த நிலையென
வானிற் பிறைநில வேக
முனைந்து மறைமுகில் இருண்ட குறைதர
உருண்டு மதிவெளி யோட                
நனைந்த குளமலர் விரிந்த மலரல்லி
நினைந்து மகிழ்வினி லாட
வினைந்த எழிலிலும் புனைந்த தமிழ்க்கவி
விளங்கும் அழகழ கன்றோ

தனிச்சு கம்தரும் இனித்த மிழ்வழி 
இறைந்த ஏடுகள் கற்றே
பனிக்கு ளிர்தனில் மதுக்கொ ளும் மலர்ப்
படுக்கையமர் வண்டாகி
நனிச்சுவை தமிழ் இழைத்த கவிதனை
நினைத்துப் படித்திட வென்றே
இனிச்சை கொளுமனம் இயற்கையின் வரம் 
எடுத்த உணர் வழகன்றோ

கனிந்த மரமதி லிருந்த குயில்தனும் 
கிளர்ந்த மகிழ்வொடு கூவ
நனைந்த நறுமண மெழுந்த மலர்வன
மிருந்து தென்றலுமோட
குனிந்த கதிர்களும்  நிறைந்த கழனியில்
குலவக் கலகலத் தாடும்
முனைந்து சுவைதரப் பிறந்த கவிதைகள்
மேன்மை  அழகழகன்றோ

விளைந்த தாமரை விடிந்த வேளையில்
வெளுத்து வானடி காண
குழைந்தை கையிடை அளைந்த குங்குமம் 
குழைத்துப் பூசிய  தாக
நெளிந்த முகில்தனும் சிவந்து வானடி
எழுந்த ஆதவன் போற்ற
தழைந்த எழிதனும் திளைந்த மனமகிழ்
தரினும் தமிழ் அழகன்றோ

இழைத்த வலியொடு திகழ்ந்த வீரமும் 
எடுத்த தமிழ் மற வீரர்
நுழைந்த துயர்தனை நிறுத்தித் தமிழெனும்
நிறைந்த வளம்தனைக் காக்க
எழுந்தும் ஒருமுகம் இழைந்த பொழுதினில்
இறைமை தமிழ் வலி கொன்றார்
இழந்த உரிமையை எடுக்கும் நாளது
என்று மழகழ கன்றோ