Saturday 23 May 2015

புத்தாண்டு 2015

 
மங்கல ஓசை எழுந்துவர 
  மங்கையர் கள் நடமாடிவர
சங்கு ஒலித்திடும் சத்தமெழ 
   சாய்ந்து மரங்கள் சலசலக்க
பொங்கும் தமிழிசை காதில்வர 
   பொய்கை இளந் தென்றல் வாசமிட
எங்கும் மணியொலித் தின்பமெழ 
   ஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ள

வெங்கனல் வீசிடும் நீதியெழ 
   விட்டெழுந்து தீமை ஓடிவிட
தங்க ஒளிநிலா ஊற்றிவிட 
    தந்தன தந்தன தாளமெழ
சங்க தமிழிசை சந்தமிட 
    சார்ந்து குயிலிசை கானமெழ
செங்கனி கொண்டதை தேனழைந்து 
    தின்னவென பெண்கள் தந்திருக்க

மங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில் 
    மாறி இருள் போர்வைமூடிவிட
அங்குமிங்கும் வண்ணம் பூசியதாய் 
    ஆக்கும் வண்ணஒளிக் கோலமிட
பொங்கி விரிவன பூச்சரங்கள் 
    போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்
தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலே 
   தந்திடப் புத்தாண்டு வந்ததுவோ

வெள்ளி முளைத்து விடியுதென 
   வேண்டுவர் வாழ்வில் உதயமெழ
புள்ளியிட்ட மானும் துள்ளுதெனப் 
   பூவையர் சின்னவர் ஆனந்திக்க
அள்ளி யணைத்திடத் தாயவளும் 
    அன்புகொண்டதந்தை கூடிநின்றே
உள்ளமதில் பெருஆனந்தமும்
    உண்டு செய்யுமோ புத்  தாண்டுமிதே!

..............................
 

No comments:

Post a Comment