Thursday 21 May 2015

அழகானது



வனைந்த கலயமும் உடைந்த நிலையென
வானிற் பிறைநில வேக
முனைந்து மறைமுகில் இருண்ட குறைதர
உருண்டு மதிவெளி யோட                
நனைந்த குளமலர் விரிந்த மலரல்லி
நினைந்து மகிழ்வினி லாட
வினைந்த எழிலிலும் புனைந்த தமிழ்க்கவி
விளங்கும் அழகழ கன்றோ

தனிச்சு கம்தரும் இனித்த மிழ்வழி 
இறைந்த ஏடுகள் கற்றே
பனிக்கு ளிர்தனில் மதுக்கொ ளும் மலர்ப்
படுக்கையமர் வண்டாகி
நனிச்சுவை தமிழ் இழைத்த கவிதனை
நினைத்துப் படித்திட வென்றே
இனிச்சை கொளுமனம் இயற்கையின் வரம் 
எடுத்த உணர் வழகன்றோ

கனிந்த மரமதி லிருந்த குயில்தனும் 
கிளர்ந்த மகிழ்வொடு கூவ
நனைந்த நறுமண மெழுந்த மலர்வன
மிருந்து தென்றலுமோட
குனிந்த கதிர்களும்  நிறைந்த கழனியில்
குலவக் கலகலத் தாடும்
முனைந்து சுவைதரப் பிறந்த கவிதைகள்
மேன்மை  அழகழகன்றோ

விளைந்த தாமரை விடிந்த வேளையில்
வெளுத்து வானடி காண
குழைந்தை கையிடை அளைந்த குங்குமம் 
குழைத்துப் பூசிய  தாக
நெளிந்த முகில்தனும் சிவந்து வானடி
எழுந்த ஆதவன் போற்ற
தழைந்த எழிதனும் திளைந்த மனமகிழ்
தரினும் தமிழ் அழகன்றோ

இழைத்த வலியொடு திகழ்ந்த வீரமும் 
எடுத்த தமிழ் மற வீரர்
நுழைந்த துயர்தனை நிறுத்தித் தமிழெனும்
நிறைந்த வளம்தனைக் காக்க
எழுந்தும் ஒருமுகம் இழைந்த பொழுதினில்
இறைமை தமிழ் வலி கொன்றார்
இழந்த உரிமையை எடுக்கும் நாளது
என்று மழகழ கன்றோ

No comments:

Post a Comment