Tuesday 4 August 2015

இப்படி நாம் காதலிப்போம்

( பொங்கல் கவிதைப்போட்டி 2015)

வானலைந்த தீயெழுந்து வீறுகொள்ளும் காலை 
. வாசங் கொண்ட காற்றினோடு வட்டஅலைப் பொய்கை 
மீனலைந்த தாய்துடிக்கும் மென்விழி கொள்மங்கை 
. மேனி நோக்கி மாலைவிட்ட மன்மதன் கைப்பாணம் 
மேனெழுந்து காற்றிலோடி மேதினியில் வீழ்ந்து 
. மென்மலர்முகை களென்று மொட்டலர்ந்த தாமோ 
தேனழைந்த பூக்கள் கண்டும் தீந்தமிழ் கொள்ளின்பம் 
. தேறுமோ விட்டே தமிழைக் காதலிப்போம் வாடி 

ஆ,நலிந்து போகுதெங்கள் அன்னை தமிழ்த்தேசம் 
. அன்புகொண்டு தேசம்மீது காதல்கொள்ள வாநீ 
தேனழைதமிழ் சுவைக்க தித்திக்கின்ற தாகி 
. தீந் தமிழ்நற் காவியங்கள் தேர்ந்த நெஞ்சம் கூடி 
கூனெடுத்த நெற்றிமீது கூந்தல் கலைந்தாடி 
. கொஞ்சுகின்ற போதுகொள்ளும் ஆசைதன்னை நீக்கி 
தானெடுத்த போரிலே எம் தமிழ் அழித்த சாதி 
. தான் விலக்கவேண்டி மண்ணைக் காதலிப்போம் வாடி 

ஆனஎம் தமிழ் வருந்த ஆனந்திப்ப தோடி 
. ஆக என்ன பார்த்திடுவோம் அத்தனைக்கும் நீதி 
போனஎங்கள் வாழ்வுகொள்ளப் பின்னும் நேர்மையாகி 
. புத்துணர்வு கொண்டுமக்கள் வாழவைக்க வேண்டி 
ஞானமுள்ள தாக மாந்தர் நாளூம் இன்பம் மேவும் 
. நல்லவாழ்வின் இலட்சியத்தைக் காதலிப்போம் வாநீ 
நானெழுந்து கொள்ளும்வேளை நாடிநீயும் வாடி 
. நாடும் நல் சுதந்திரத்தைக் காதலிப்போம் கூடி 

********************

No comments:

Post a Comment