Friday 25 September 2015

சக்தி தருவாள்!



சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாளினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கைச் சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடெனச் சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடாச் சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும் சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல் ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்ப்படும்
துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பெறச் சிந்தை யேங்கி வெந்திடா
வக்கணைச் சொல் பேசியே வந்த நச்சுப் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

No comments:

Post a Comment