Friday 25 September 2015

என்றும் அருகில் நில்!



நீயிருந்தாய் என்னருகே நினைவெழுமென் கற்பனைகள்
நெஞ்சிலிசை கொண்டினிமையாகவே
தாயிருந்தால் காணும் சுகம் தந்தவள் நீ தந்ததனால்
தானுமெழில் கொண்டொரு சொல்லாகவே
போயிருந்தால் கோவில் சிலை போட்டுடைக்க மண்கலயம்
போகமென்னும் மாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம் வாடி நின்றால் தேய்ந்திடவும்
வாழ்க்கைகொண்ட மாயநிலை மாறவே

சேயழுதால் தாயணைக்கும் சேர்ந்தகொடி மரமணைக்கும்
சீறிவரும் மாநதியுமோடியே
தூய கடல் சேர்ந்திணையும் தூக்கம்விழி கொண்டணையும்
துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத் தோன்றிடாது வாழ்வுதனை
தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில் பூத்த ஒளி பொலியுவண்ணப்
பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம் காற்றடிக்க ஊதுமூங்கில்
காட்டருவி கொட்டுமோசை கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித் தாட மறை வெண்முகிலில்.
வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை மேவிஎழுங் காற்றினொலி
மீறி எழும் ஆழியலை ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித் தந்தவுடல் கெட்டுவிட
தாங்கிஎமை ஆட்கொள்ளுவாள் சோதியே

No comments:

Post a Comment