Wednesday 25 November 2015

விதியின் விளையாட்டு



விதிநீயே விளையாடும்போது 
 வேண்டுவதென் நாம் மனிதம்தானா 
எதிலேயும் துன்பங்கள்தானா 
  இல்லை யுனக்கிரக்க குணம் ஏனோ
குதித்தாடி நீசெய்யும் மாயம் 
  குருடாக்கி எமை வீழ்த்தலென்ன
சதிசெய்யும் கலைபடித்த வல்லோன்  
  சகுனிக்கோ பாடம் சொன்ன ஆசான்

நதிஓடும் நடந்தாலும் சேரும் 
  நான்கு திசை கண்டும் கடல் கூடும்
புதிதாகப் பூத்த மலர் வண்டு 
  போதை கொளும் தேனை உண்ட பின்பு
பதியோடு சதிசேரும் வாழ்வும் 
  பனிபூத்த புல் வெளியின் காற்றும்
இதிலேயும் அதிலேயும் எங்கும் 
  இட்ட  மகிழ் வேன் எமக்குத் துன்பம்

விதியென்று கட்டளை யிட்டாரோ 
   விந்தையுன்னில் எண்ண்மிட்டதாரோ
மதிதன்னை மயக்குவதில் மன்னன் 
   மாயவித்தை மகுடிஊதும் குள்ளன்
பொதியாக நாம்சுமக்கும் கூடு 
   போட்டுடைக்க செய்யும்வழிபார்த்து
அதிலேயும் ஆணவத்தைக் கொண்டு 
   அள்ளுமுடல்  செய்வலிகள் தந்தே

கொதிக்கின்ற உள்ளமதை கொண்டோம் 
  கூடிச் செய்யும் வஞ்சனைக்குள் நில்லோம்
அதிகமென்று கொண்டதென்ன துன்பம் 
  அல்லலுற்று வேதனை கொள் இல்லம்
முதிர்வயலில் முற்றும் கதிர்வளையும் 
  முத்தமிழைப் பேசுமினம் நிமிரும்
சதி செய்துவாழ்வளிக்க முன்னே 
  சற்றுப் பொறு சதிமதியால் வெல்வோம்

No comments:

Post a Comment