Thursday 24 December 2015

கண்டதெல்லாம் துயரமே!






     ( கெட்ட காலக்கனவு)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

*****************

No comments:

Post a Comment