Wednesday, 25 November 2015

செய்தவள் அவளே!

திக்கெட்டும் சேதிகள் தேடிதிரி இன்னும் 
தேரெனச் செய்தவள் அன்னை
சிக்கட்டும் உள்மனம் தீயினிலே எனச்
சேர்த்திடவோ வெறும் பொன்னை 
தக்கதக என்றே மின்னிடச் செய்யவும்
தந்தவளோ தீயில் என்னை
தக்கத் தக தக தக்கன காணவோ 
தந்ததுமென் என்னுள் என்னை?

இக்கதியே னதை  இன்னும் புரிந்திலேன்
இக்கணம் மட்டிலும் இல்லை
பக்கத்திலே அவள்பட்டு ஓளிர்ந்திடப்
பார்த்தவன் என்செய்ய கண்ணை
முக்கனம் கேட்டவன் மூக்கில் விரலிட
முன்னேவிட்டால் இனி யென்னை
எக்குறைவுமற்று காத்திடுவாள் என்றே
எண்ணினேன் தாஅருள்தன்னை

அற்புதமே அன்னை யாக்கைஅளித்தவள்
ஆக்கலழித்திட முன்னை
பற்றுதலால் எனைப் பற்றிநின்றாள் வெகு
பக்குவமாக வேதனை
சுற்றிநின்ற துயர் போகிடச்செய்துமே
சுத்தமென் றாக்கிட என்னை 
இற்றைய நாள் ஒளி யீந்தனளோ இனி
என்வழி செல்லடிசொல்லாய்

நித்தியமே சக்தி நிச்சயமே ஒளி
நீளவிண்ணின் ஆதிமுன்னை
சத்திய காரூண்ணிய சித்தி விளைப்பவள்
செய்யென சொல்வதும் உண்மை
புத்தியிலே கடும் போதனை செய்வளோ
பார்த்திருந்தேன் இனி என்னை
எத்திசையில் வழிகாட்டுவளோ அதை
எண்ணிக் கிடக்கிறேன் அன்னை!

******************************

இப்போது இல்லை, பின் எதற்கு?

தேகம் கறுத்துக் கிடந்ததென்ன - அந்தத்
திங்கள் ஒளியை இழந்ததென
ஆகப்பெ ருத்தும் அவ் வாழியுயர் - திரை
யாகி எழுந்தும்பின் வீழ்வதென்ன
போகம் உடம்பினைத் தின்பதென்ன  அது
போதுமெனும்வரை கொண்டதென்ன
தாகம்  எடுதத இம் மேனியிலே பேயும்
தாவிப் பிடித்தாடிக் கண்டதென்ன

காகம் குயில் கறுத் தேயிருந்தும் அந்தக்
காகம் குயிலிசை பாடிடுமா
நாகம் நளினம் கொண்டே யசையும் - அதை
நாமும் ரசித்துற வாடிடவா
வேகமெடுத்த இவ்வாழ் வினிலே - விடை
வேண்டித் திரிந்துள்ளம் காண்பதில்லை
யாகம்முடித்து வான் வீதியிலே எங்கள்
யாத்திரை யின்பின்னர் கண்டுமென்ன

சோகம் மனதினைக் கவ்வுவதும் அது
சேர்ந்து வரும் வாழ்க்கைப் பாதையெங்கும்
பாகமெனப் பங்கு கொண்டபழி - செயல்
பண்ணும் மனதினை வென்றுவிடும்
ஏகம் அனேகமென்றான ஒளி- அந்த
ஏற்ற மிழந்துபின் வாடுகையில்
பூகம்பமாய் உ:ள்ளும் மேலிருந்தும் எங்கள்
பேணி வளர்த்தமெய் தீய்த்துவிடும்

மேகம் பொழிந்திட நீர் வழியும்  இந்த
மேனிமலர் சுகபோதை யெழும் பி0ர
வாகம் என புரண்டே மகிழும் - -முடி
வாக உணர்வுகள் தானடங்கும்
ஆகும் தனிமைகொண் டாணவமும் அது\
ஆட்டிவதைதிட்ட  மேனிதனும்
தீ‘கும்’மென்றோடித் எரித்தபின்னர் மனம்
தேடும் அமைதி கிடைத்துமென்ன !!

தீவிழி வேண்டும்


சங்கரனின் கண் வேண்டும்
.  சற்றே இப்புவிதன்னில்
    சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
.   புல்லோரின் தீயமனம்
.   பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
.  அகம் வந்தே இனம் கொன்றும்
.  அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
   இச்சைகொள்வோர் கண்டுவிழி
.   இமைக்க வேண்டும்

மங்கை தமிழ்ப் பெண்ணவரை
.    மணமேடை இல்லாது
.    மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
.    சினம் மேவும் நிலைகண்டு
.    சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
.    அவர்பெண்மை இழிந்தூற்றி
.     அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
.     என்விழியும் திறந்தனலை
.     இறைக்க வேண்டும்

வந்துபிறந் தோம்வாழ்வில்
.    வகையறியாத் தவழ்ந்தோடி
.    வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
   அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
.   அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
.   வியந்தே அறிந்த நம்
.   வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
.    எடுக்க அவர்மீதுகனல்
.    எறிய வேண்டும்
 
வஞ்சகமாய் வந்து தமிழ்
.   வரலாற்றைத்  திரித்தெழுத
.   வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
.    கொடியறுக்கும் விதமாகக்
.    கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
.    நடுவூற்றிக் கலப்தென
.    நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
.    தான்கருக வைத்தோரும்
.    தகிக்க வேண்டும்

சிம்மாசனம் ஆட்சி
.    செங்கோலும் திறைசேரி
.    செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
.    அலங்காரம் அந்தபுரம்
.    ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
.     சிரிப்போ நகைசிந்தும்
.     சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே  
.      இருந்த இனம்அழித்தோர் கண்
..     டிமைக்க வேண்டும்

துஞ்சும் நெஞ்சம்

அன்புடை நெஞ்சங்கள் ஆவி துடித்திட
  ஆக்குவன்  பேரென்னவோ  - பகை
வooன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
     வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
   தேவைகள் தீர்த்திடவோ  - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
     தென்றலாகித் தொடவோ

எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
  எண்ணக் கிடைப்பதென்ன  - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
  காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
  பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
  பூமியில் பொங்கிடுமோ

செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
  சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
   மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
  தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
   தின்புற ஏன்கிடந்தோம்

கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
  கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
  வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
    எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
   தேவை தலைமையொன்றும்

வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
    எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
   சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
   சட்சட் பட்டென் றடிக்கும் -  நிலை
கொட்ட மடித்தின்பக்  கும்மாளம் போட்டிடும்
    கோலங்கள் காண்பதெப்போ

===================

மனம் செல்லும் தனி வழி


பனிவிழும் மலை தனும் சுடுமா - நடுப்
பகலவனொளி குளிர்ந்திடுமா
கனி கொண்ட சோலையின் முதிர்மா - தரும்
கனிந்திடும் பழம் கசந்திடுமா
இனி மனம் இனித்திடத் தருமா - நல்
இயற்கையின் ஊற்றெழும் விதமா
மனிதமும் திளைத்திட வருமா - என்
மன திறைமகள் தரும் தமிழ்ப்பா

மனமது  தனி வழிசெல்லும் - அது
மயங்கிடும் மதியொளி கண்டும்
தனதெனும் வழியொன்று கொள்ளும் - ஒளி
தவிர்ந்தொரு இருள்வழி கண்டும்
மனம்கெட இருவிழி அஞ்சும் - அதை
மதிப்பதில்லை எண்ணம் மிஞ்சும்
இனமதில் குரங்கதன் சொந்தம் - அது
இடர் கொள்ள உயிரது துஞ்சும்

தனமது தேடி நெஞ்சேங்கும் - அது
தவறெனும் வழி யென்று கண்டும்
எனதென உரிமையும் கொள்ளும் -அதை
எதிர்பவர் பகைஎனத் துள்ளும்
கனவுகள் பலபல காணும் - அக்
கனவதன் நிலைகொள ஏங்கும்
புனிதமென் றெதனையும் அள்ளும் - அவை
பிறிதெனக் கண்டுபின் வெம்பும்

சினமது நிலைதனை வெல்லும் - அதில்
சிரிப்பிபெனும் உணர்வினைக் கொல்லும்
வனமுள்ள மாவிலங்கென்னும் - கொடும்
வகையுடன் கொடுமைகள் செய்யும்
சுனைதனில் எழில் மலர்க் கமலம் - அது
சுழல்விரி அலை தள்ளும் அவலம்
எனை யொரு தருணமும் தள்ளும் - பின்
இள வளர்மதி நிலை கொள்ளும்

விழுந்தனன் வேறில்லை வழியில் - மனம்
வலித்திட கிடப்பவன் கதியில் \
எழுந்தவை இடர்தரும் எண்ணம்,- அது
இங்கில்லை எனதரும் உள்ளம்
வழுந்திய பெருவினை கொண்டும் - என்
வாழ்வினில் பொழிந்த கண்,மழையும்,
அழுந்திட பிறந்ததும் ஆகும் - அதை
அதி பெருந் தீ புடம் போடும்

--------------------

அழகோ நிறைவோ


பொழிமழை பெருகிடும் பொழுதினில் மலைதனில்
பிறந்திடும் அருவிகள் அழகோ
வழிநெடு கிலும்விளை கதிர்களும் பசுமைகொள்
வயலிடை உலவிடல் அழகோ
விழிமொழி பகிர்ந்திடும் விதங்களும்இளமையின்
வளம் மலரிதழ் எனும் அழகோ
மொழிதமி ழினிதென முதன்மையி லிருவென
முனைந்திடப் பெறும்நிலை அழகோ

விளைகடல் திரவியம்.விரவிய அலையிடை
விழுந்தவர் பெறும் குவை மகிழ்வோ
முளைவரும் பயிர்களில் தளிர்வரும் தொடுமதை
மலர் மணம் தருந் தென்றல் மகிழ்வோ
வளைபுகு சிறுநண்டு வலம்வருங் கரையினில்
வனிதையர் எழில்நடை விதமோ
களையெனத் தமிழ்மறந் தெதிரிடை புகுஞ் சிலர்
கருத்திசைந் திடும்கணம் மகிழ்வோ

இனிகனி யெனும்சுவை இருந்திடு மமுதெனில்
எடுத்துண்ணு மவர்பசி விடுமோ
தனிமையில் துயரினைக் கொளும்மகன் சதியென
பெறவுடல் பெரும்பசி விடுமோ
முனிவரும் துறவறம் தனிலிறை வரம்பெற
முனைவதில் அவர்பசி விடுமோ
இனியெம தமிழ்கொளும் இழப்பிலைச் சுதந்திரம்
இதுவெனும் வரைபசி விடுமோ

மழலையின் குரலினை  மகிழ்வொடு விரும்புவர்
மடியினில் கனம்கொள நிறைவோ
தழலெனும் பெரும்பிணி சுடுமுடல் கருகிடத்
தணிக்குமௌ டதம்தரும் நிறைவோ
குழலெனும் இனிமைகொள் குரல்தரு இசைநயம்
குலவிட மனம்பெறும் நிறைவோ
பழமைகொள் புகழ்தமிழ் பகைவிடுத்தொரு நிலம்
பகிர்ந்திடும் நிறைவொன்று வருமோ


..........................

சக்தி கொடு

 சக்தி கொடு சஞ்சலந் தீர் சற்குணவி ருத்தியொடு
புத்திகொடு புன்னகைத்தே பூவுலகில் வாழ்வமைக்க
உத்திகொடு உண்மைகொடு உத்தரிக்கும் வாழ்வினிலி
ருத்தியெனை வாழ்விழக்கும்  இன்னல் பெறச்செய்யாதே

ரத்தினமாய் மேனிசிவந்தொற்றிய வெண்மேகமதுள்
புத்தொளியும் கொண்டகதிர் போதினில் தன் தலைகாட்ட
சுத்தஓளி வான்பரவிச் சுதந்திரமென்றிசை பாடப்
பித்தெனவே ஆகும்மனம் பேணுமின்பம் பெருகாதோ !       

மெத்தனமோ மேவும்நிலை மேதினியில் வேண்டா நல்                          
    
உத்தமியே உள்ளுணர்வீல்.ஓடும் அலை தூங்காது
வித்தையெனக் கற்றிடும் நம் வீரமொழி இன்னிசைப்பா
எத்தனை யென்றில்லாது நித்தம்மொன்று பூக்கவிடு

சத்தமில்லா வண்டமரத் தேன்மலரும் ஊட்டும்மது
நித்தமுமென் கையெழுத நின்னொளியும் கூட்டிவிடு
கத்தி யெனும் கூர்கொளவும் காலமதில் தீட்டியெடு
அத்திகட்டாக் கவிதைமது  அள்ளியெனை ஈயவிடு