Saturday, 7 May 2016

Post title பாதைஒன்று பயணம் இரண்டு


 
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’
  காட்சி தெரியவில்லை
நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்  
   நேரும் நிலையுமில்லை
போரெனக் கீழே புரண்டெழு என்றதோர் 
   பேதமை தானுமில்லை
வாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலே 
   வந்ததென் தோன்றவில்லை

ஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்ட 
    அத்தனை எண்ணங்களில்
போயிருந்து செய்த போக்கினிலே என்ன 
   பூத்தது  அன்பின் வகை
வாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லை 
  வற்றிய தோ இலை யிலை
காயிருந்தும் கனிகொள்ள வில்லை 
   அந்தக் காரணம் சக்திநிலை

சேயெனவே நின்று காணுகிறேன் 
  எந்தத் தேசம் புதிய கலை 
தூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன் 
  துன்பம் ஒழிந்த நிலை
தாயன்பு கொண்டதி னால் இதுவோ அட 
  சக்தியில் ஊற்று தனை
போயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன் 
   போக்கினில் சாந்தஎல்லை

மீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லை 
  மாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமே 
  இன்றுபோல் வந்ததில்லை
ஊதி வளரென்றே  உல்லாசத் தீயினை 
  ஓங்கிடச் செய்தவளை
யாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும் 
  மீண்டும் கவிதை மழை  

அந்தநாள்

வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த
வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க
சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த
சோதியாக மின்னும் அன்பு கொண்டு
தொல்லையற்று நம்மைநாமே தோள் வலித்தவீரர்சூழ
தூக்கியகை வாளும்கொண்டு காக்க
எல்லையிட்டு நெல்வயல்கள் ஈரமுற்ற ஆழிசார்ந்த
மண்ணும் முல்லையோடு வாழ்வு கண்டோம்

நெல்வளைந்து மங்கை போலும் நீரில்தன் முகம்கணித்து
நீலவானின் செங்கதிர்க்கு நாணும்
வல்லகூச்சலிட்டும் ஓடி வானெழுந்து வட்டமிட்டு
வான்குருவி நெல்துணித்துக் காவும்
கல்லில் தெய்வரூபம் கண்டு கந்தன்வேலை முன்னிறுத்திக்
காணும் தெய்வக் கோவிலொன்று பக்கம்
இல்லை துன்பமென்று வாழ்ந்த எங்கள்தேச  மக்களன்றோ
இன்பங் கொண்டதோ மருதமாகும்

மென்னலைக்கு ஏற்ப ஆடும் மீன்பிடிக்கும் ஓடமேறி
மீண்டவர் கரையிலிட்டபோது
தன்வலைக்கு வீழ்ந்த மீன்கள் தான்துடிக்க கண்டுமாலை
தூயவள்அஞ் சும்விழிகள் நோக்கி
என்னதோ இரண்டுமீன்கள் என்னை தம்வலைக்குள்வீழ்த்தும்
ஈதொருநல் லற்புதம் என்றேங்க
வன்பகை முடிக்க வீரம் வாய்ந்த கப்பலோடும் மக்கள்
வாழ்க்கை நெய்தல் என்றதன்மை காணும்


சில்லென்றூதும் வண்டும்தேடும் செவ்விதழ்ப் பூ கானகத்தில்
சோவென்றோடி விழருவிகொட்டும்
கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்
எல்லைகாத்த வீரர் தூரம் இட்டசத்தம் வெற்றி கூறும்
ஏற்றதோர்  முழவின் ஓசை கேட்கும்
நல்லினித்த வாழ்வுகாணும் நாட்டுமக்கள் அச்சமின்றி
நாளுமன்று வாழ்ந்த காலம் யாவும்’

இன்றழிக்கத் தீயையிட்டு அள்ளிசாம்பல் மேட்டில் வீடு
அந்நியன் தன்சொந்தமென்று கட்டி
இன்பமென்று வாழ்ந்த வீடு எங்கள்மண்ணும் விட்டேயோடி
உண்ட நெல் விதைத்த காணி தோட்டம்.
இன்னமும் வலைபிடித்து ஏற்றவாழ்வி யைந்த மக்கள்
இல்லத்தோடு சொத்தும் சூறையாடி
கன்னமிட்ட வர்கரங்கள் காணும் ரத்தப்பூச்சு மாற்றக்
கைவிலங்கு போடும்நாளுமென்றோ

----------............

உலகம் உறவா பகையா?


 
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்
  தேன்மலரில் பாசம் கொள்ளாது
தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்
  தந்த மலர் தன்னைக் கொள்ளாது
மீனெடுப்பில் துள்ளுமிரு மெல்லிழையார் கண்ணசைவில்
  மோகமுண்டு பொய்த்திடும் வாழ்வு
ஊனெடுக்கும் இன்பமென்றே எண்ணிவிடின் மாறித்துன்பம்
 ஏற்றமுறும் இச்சக வாழ்வு

வீடிருக்கும் வாழவிதி வெற்றிடமென் றாக்கிப் புயல்
  வீசுமதில் விளைவு பொல்லாது
கூடிருக்கும் கூட்டிலுயிர் கொண்டிருக்கும் கூடியது
  குற்றமென்றோ குளுமை பெறாது
ஆடிநிற்கும் மேனியிலே ஆணவத்தின் சாயலெழ
   ஆனந்தமோ கூடிவராது
கேடிருக்கும் செல்லும்வழி கொள்ளதுயர் மேவியின்ப
  கோட்டினைக்கால் கொள்ளவிடாது

பேடிருக்கும் பாட்டிசைக்கும் பக்கமதன் துணையிருக்கும்
   பேதமை மை யல் கொளும்வாழ்வு
ஓடி ரத்தம் சூடெழவே உள்ளிருந்து பொங்கும்வகை
   ஊற்றெடுக்கும் உறங்கவிடாது
காடிருக்கும் காட்டின்வழி கடையிருக்கும் விதியமைத்த
  காட்சிவழி மாற்றமிராது
கோடித்தனம் கொண்டிருந்தும் கொள்கைநெறி நேர்நடந்தும்
  கூற்றுவன்முன் வெல்ல விடாது

மேடிருக்கும் தாழ்விருக்கும் மின்னல்இடி கொண்டிருக்கும்
  மேதினியில் எம்மரும் வாழ்வு
கோடிருக்கும் தாண்டிமனம்  கொண்டிருக்கும் ஆவலது
  கோண்லிடும் நேர் நிமிர் வாழ்வு
நாடிருக்கும் நாட்டிற் பல நல்லவரும் கெட்டவரும்
  நண்பரெனக் கண்டிடும்போது
கூடிநிற்கும் காவலதும் குன்றித்திரிந் தாழமெனக்
  கொள்ளும் முரண் குணமிருக்காது

மூடிநிற்கும் பச்சைமரக் கூடலிலே கள்ளொழுகும்
  மென்மலர்கள் பூத்திடும் பாரு
தேடியுறை கொள்ளவென நீநடந்தால் தேளுடனே
  தீண்டும் விஷப் பாம்பு விடாது
வாடிநிற்கும் உள்மனதில் வந்ததுயர் நீங்கிடவே
  வண்ணவிரி வா ன்வெளி யாளும்
கோடியொலிப் பேரதிர்வின் கூற்றினிலே நீகலக்கும்
   கொள்கைதனைக் கைதொழு வேண்டு!


*******************

இது கேள்வி .? பதிலல்ல..!

       
 
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க
அள்ளித்தீயை இட்டவரும் யாரோ
பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்
பூனையாகஎம் மிடம்வந்தாரோ
மீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு
மூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோ
பூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி
பேசும்செந் தமிழ்அழித்த பாரோ

ஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு
அந்நியர் எம்மண் பறிக்கலாமோ
கூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது 
குண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ
நீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று
நீறு கொள்ளவென்று தீ சொரிந்து
வேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும் 
வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ

தோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு 
தாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க
தீண்டியும் விலங்கினத்தை  தீதினில் செய்மானம் ஒப்ப
தீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்
சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணா
தூங்கியே கிடந்த சொந்தம் யாவும்
ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்
அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோர

மாண்டவர் எழுந்திடா  ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து
மாபழந் தமிழ்மொழிக்குக் கேடு
வேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து
விட்டதை மறைக்க ஏங்கும் போது
ஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற
ஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாள
நீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற
நேரத்தில் உண்டான தெல்லை காணும் ????

பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு
பத்தினில் அறுவன் ஆங்கிலத்தை
நோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்
நின்றிடில் தமிழ் சிதையக்காணும்
பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி  எங்கள்
பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்
பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன
பாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும்  ???
******************

நானா அவன்


 
எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்
இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்
கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்
களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்
தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்
தனிவழிப் பயணம் நடப்பவனாம் 
வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’
வரும்போ தஞ்சா வீரனுமாம்

குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன் 
குலவும் தென்றலின் இளமகனாம்
கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்
கனவை ஆக்கிடப் போராட்டம் 
மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன் 
மனமும் வாய்மைசொல் பூவனமோ 
கணத்தில் கற்பனை ரதமேறி - அவன்
கைதொடும் தாரகை ஒருகோடி

தடைகள் வருவது தானுடையும் - அவை
தண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்
நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில் 
நந்த வனம் எனும் உணர்வூற்று 
இடையில் ஒருமயில் நடமாடும் -அது
இன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்
விடைகள் தேடியே ஓடும்நதி - என
விளங்கும் வாழ்வின் போக்கினிலே

இடையே விதியும் எழுந்தாட  - இவன் 
எண்ணத் திசையினில் காட்சிமுரண்
மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்
மதியின்  பொறுமை தோற்றாலே
உடையின் உண்மைப் பிரவாகம் - அதை
உணர்வோ கண்டால் வலி சேர்க்கும்
படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்
பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்

*************************

மனத்தோட்டம்

 

கவிதை மலர்களும் காணும் மனதெழும்
  கற்பனைத் தோட்டத்திலே
புவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும் 
  பூக்களெனும் வகையே
செவியில் மதுவெனப் புகுமே இசையெழச் 
   சேரும் தமிழினிதே
குவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம் 
    கொள்ளும் கவிதைகளே!

நிதமும் பூத்திடுமலராய் அழகுடன் 
  நினைவில் சுவை தருமே 
விதமும் உயிரிடை விளங்கும் உணர்வுகள்
  வெளிச்சம் தரும் அகலே
பதமும் பாங்கினில் இதமும் மகிழ்வெழப் 
   புதிதோர் சுகம் வருமே
உதயம் பொழுதெழும் கதிரின் ஒளிமிக
    உடையோர் பெருநிதியே
கவிதை கனிவது கலையின் எழுமனக்
   காட்சி பெருமிதமே
புவியில் கவிஞன்கண் பார்வை தரும்பொருள் 
  படைப்பில் தனிரகமே
குவியும் மனதிடை கொள்ளும் உணர்வுகள் 
   கீதம் இசைத்திடவே
கவிதை எனும்காட் டாற்றுடை வெள்ளம் 
   கட்டை மீறிடுமே

தவிப்பும் இளமையின் தாகம் மனமெழும் 
   துயரம் மகிழ்வுடனே
கவியின் பொருள் சினம் காதல் களிமனம்
   கனிவும் பெருகிடவே
செவிகொள் இழிமையும் சேரும் வியப்புகள்
    செழிக்கும் போதினிலே
குவிவன உணர்வுக் கிளர்வினில் கவிதை
     கொட்டும் அருவியதே

*****************

விழுந்தும் எழல் வேண்டும்


 
வலியெடுத்தும் அறமெடுத்தும் 
   பகைமுடித்த தமிழ இன்று
   வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க 
   கிடுகிடென்று உடல்நடுங்க
   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு 
புலிவிரட்ட முறமெடுத்த 
   பெண்மணிக் கென்றான கதை
   புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
   களையெடுத்து தோள்பெருக்க
   கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும் 
     மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
     மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில் 
     தான்விழுப் புண் தாங்கினானோ ’
     தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
 நிலை யெடுத்த வீரஅன்னை 
  நெறியெடுத்த பாவையர்கள் 
    நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன 
     குரல் கொடுத்தும் அவனியெங்கும்
     கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
 
சிலையெடுத்த நிலை யிருப்பின் 
  சிறுமைதரும் வாழ்விலென்றும்
  சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே 
  அடங்கியுள்ளே கிடந்ததில்லை
  அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோது அஞ்சி 
   வாழ்விழந்த தென்று புறா
   வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே 
   தர்மவழிகாட்டும் அதைத்
   தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு


***********
 
வலியெடுத்தும் அறமெடுத்தும் 
   பகைமுடித்த தமிழ இன்று
   வகை யடுத்து நடப்பதென்ன கூறு
கிலி பிடித்து குளிரெடுக்க 
   கிடுகிடென்று உடல்நடுங்க
   கீழ் கிடப்பதோ நினைந்து தேறு 
புலிவிரட்ட முறமெடுத்த 
   பெண்மணிக் கென்றான கதை
   புழுகிவைத்த பொய்தனுமோ அன்று
கலியெடுத்து தொகையுரைத்த
   களையெடுத்து தோள்பெருக்க
   கதைநிறுத்தி புதியவாழ்வு காணு

மலைசிறுத்தும் திடம்பெருக்கும் 
     மகிழ்வெடுத்துக் களம்புகுந்த
     மகன் குடித்ததனமறுக்க வென்று
தலை யடித்து கதறி மார்பில் 
     தான்விழுப் புண் தாங்கினானோ ’
     தவறிம் தன்முதுகில் இல்லையென்றே
 நிலை யெடுத்த வீரஅன்னை 
  நெறியெடுத்த பாவையர்கள் 
    நிறுத்தியும் உயிர் பறித்த கண்டும்
குலை நடுங்கிக் கிடந்ததென்ன 
     குரல் கொடுத்தும் அவனியெங்கும்
     கரங்கொடுக்கக் கதியுமற்றதென்ன
 
சிலையெடுத்த நிலை யிருப்பின் 
  சிறுமைதரும் வாழ்விலென்றும்
  சீறிஎழும் தன்மை கொஞ்சம் வேண்டும்
அலை யெழுந்து வீழ்ந்த பின்னே 
  அடங்கியுள்ளே கிடந்ததில்லை
  அதுவெழுந்து வளைந்து கரையேறும்
வலை விழுந்தபோது அஞ்சி 
   வாழ்விழந்த தென்று புறா
   வாடவில்லை வேடனை ஏமாற்றும்
தலைசிறந்த கதைகளிலே 
   தர்மவழிகாட்டும் அதைத்
   தனுமறிந்து ஒன்றெனக் கைகூடு


***********