Thursday, 24 December 2015

பூவாக மலரச்செய்

      பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை  வளமும் தா

கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

என்ன செய்வது?

சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே

எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

கண்டதெல்லாம் துயரமே!






     ( கெட்ட காலக்கனவு)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

*****************

சிறு பெண்ணே


சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிரிக்கும் மலரம்மா
அன்னை தந்த அழகிய கண்ணே
அன்பின் பரிசம்மா
பொன்போல் கன்னம் பூவிதழ்முல்லை
பொருந்தும் வகையம்மா
புன்னகை யென்றும் புதிதாம் உதயம்
பொழுதும் நினையம்மா

அன்பை என்றும் அகமுள் கொள்வாய்
அதுவுன் பலமாகும்
இன்பம் எங்கே உள்ளது வாழ்வின்
எளிமைத் தனமாகும்
தென்பைக் கொள்ளு தினமும்வாழ்வு
தேனில் இனிதாகும்
தன்னல மெண்ணி தன்னலம் விட்டால்
தகமை உயர்ந்தோங்கும்

கல்விநற் செல்வம் காசொடு பொருளும்
காண்பது பின்னாகும்
வல்வினை யாற்று வளமொடுவாழ
வகுத்திடு விதிதானும்
தொல் திருநாட்டின் சுகமெழு வாழ்வும்
திரும்பிடத் தான்வேண்டும்
அல்லது தீர்ந்தே அறமெழுந் தாட
அடுத்து எதுவாகும்

சிங்கமும் புலிகள் வாழ்வது இன்று
சேர்ந்தோர் வனமல்ல
செங்கணை தீயின் அம்புகள்யாவும்
சிரம்மேல் எரிதூவும்
பொங்கிட வழியும் பாலென் றுள்ளம்
புதிதோர் நிலை காண
நங்கையின் உறவே நாடுன தானால்
நலமே  வாழ்வெய்தும்

தென்னவர் பக்கம் தித்திப்புண்டோ
சிறுமைக் கரமேந்தி
என்னவர் நாட்டில் ஏழ்மைப் பஞ்சம்
இயல்பென் றுருவாக்கி
பொன்னெழில் காணப் புரளும்மதியை
பெரிதோர் வரமென்றே
தன்னினம் தாழத் தனிவழிகாண்போர்
தமிழுக்குரி யோரில்

வெண்ணெய் மலரே விடிவுக ளென்றும்
வெளிச்சம் தனைத்தாரும்
விண்ணிடை காற்றில் விரியும்சுதந்திர
வேட்கை மனம்காணும்
கண்ணிடை போற்றும் கருமணிபோலுன்
கடமைகள் தனையாக்கு
பெண்ணவளே நீ பெரிதோர்சக்தி
புரிவாய் பலம் கொண்டே!

**********************

நானும் ஞானிதான்


வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும் உரமுண்டு ஞானப்பெண்ணே
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்னே
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே

மனம் காணும் துயர் மாற்று!

நிலவுகாயுது தனிமையிலே -அந்த
   நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
  நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
   உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன் 
    உணர்வுக்கு தீயெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
   கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
  காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
   மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
   மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
     தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
      தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
     குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
      குடிசையின் வெறுந் தரையே

காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
   காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
   கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
      திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
     தினம்தினம் உலவிடுமே!

சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
   சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
     சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
     நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
     நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
     வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
    காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
      நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
    காணவும் முடியலையே

இசை மீட்டல்

கலைப் பூக்கள் புவிமீது மலர்கின்றதோ
கனிவான இசைநாதம் எழுகின்றதோ
இலையேதும் இதைவெல்ல எனுமோசையோ
இளநெஞ்சம் புகழ் பூக்க ஒளியாகுதோ
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ
அறியாத  இறையன்பு வரம் காணுதோ
விலையற்ற வெகு தொன்மைத் தமிழ்வாழுமோ
விளைகின்ற அருஞ்செல்வம் மிகையாகுமோ

வலை கொண்ட  கயல் ஏங்கும் உணர்வானதோ 
வடிவத்தின் புலமைக்கு மனமேங்குதோ
தலைகொண்ட எண்ணத்தின் விளைவாகவே
தருமத்தின் நிறைவாழ்வு தனை மாற்றுமே
குலை போன்று பழம் இங்கு குவிந்தாலுமே
குரங்கான ததன் கையின்  மலர்மாலைபோல்
நிலைஎன்ப தடுமாற்றம் நிகழாமலே - வாழும்
நேர்கொண்ட கலைவாழ நெறிகொள்ளுவோம்

கலைதேரும் உளம்கொள்ளும் பெருமாற்றலில்
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும்
சிலைதன்னும் எழுந்தாடும்  சிறப்போங்கிடும்
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்

தொலைவானில் தெரிகின்ற கதிரோங்கவே
தொடும் வாசல் நிறையின்ப ஒளிச்சேரலாய்
புலைகாணும் பெருஞ்சோர்வும் பிறிதாகட்டும்
புதிதாகும் ஒளித்தூண்டல் பெரிதாகட்டும்
தலை காலும் தெரியாமல் தடுமாறிடும்
தவிக்கின்ற இருள் ஓடி ஒளி மேவட்டும்
இலைகொண்ட செழுமைக்கு இணையாகட்டும்
இன்பத்தின் மலர்காடென் றெழில் தேடட்டும்

அழகான இசைக் காடு மரவங்களாய்
அவரூதும் இசைகேட்டு மனமாடட்டும்
எழவீழ அதுவாக்கும் இரைகூச்சலும்
உயர் ‘வான ஓங்கார’  இசையேற்றமும்
முழமென்ப வளர்தெங்கும் மிகுந்தானதே
மெருகேறும் இசைபொங்கி  மெல நீளடட்டும்
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும்
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!