Thursday, 24 December 2015

பாராட்டுக்கள் இன்பம் தரும்

மகிழ்வான இதயங்கள் கண்டு - என்
மனமோ நல் இசைமீட்டி பாடும்அன்போடு
முகிழ் மாலைமலர் மென்மைபோலும் - என்
முகம்மீது புன்னகை இழைந்தோடச்செய்யும்

குழைவான கனிவான எண்ணம் - அதைக்
கொள்வதே பலகோடி வரமான தொன்று
மழையோடி மணல்மீது சென்று - அது
மறைந்தோடி இருந்தாலும் மண் ஈரமன்றோ

குழல் ஊத விரல் மூடல் வேண்டும் - அக்
குரலான திசைகூட்டி அதனூடு ஓடும்
அழலான தெரிந்தாலும் அன்பு -  என்றும்
அதனாலே புடம்போடபொன்னென்ப தாகும்

விழிகூறும் கதை நூறு பொங்கி - அதில்
விழுகின்ற துளியான தொரு சேதிசொல்லி
அழியாது அன்பெனும் வேள்வி -இன்று
அதைமீறி எழுகின்ற தீயாகி நில்லு

தொலையாது நிலவான தெங்கும் . - அது
தூங்கிடும் மறுநாளில் துள்ளி வானோடும்
கலையான தொருமூச்சு என்றும் -இக்
கலையான நிதம்வந்து கற்பனைகூட்டும்

மலரான தெழில்மாலை பூக்கும் -இதில்
மனமின்பம் கொண்டிட இளங்காற்றுவீசும்
சிலராகம் செவியின்பம் கூட்டும் - வரும்
சில்லென்ற தென்றலில் மனம்நின்று தோற்கும்

பெருவானில் குயிலோசை கேட்கும் - அது
பிறைவானில் எழுந்தோடி அது என்ன பார்க்கும்
நிறைவான ஒளிதந்து நாளும் - நிலா
நின்றிடும் சுற்றியே உலகோடு வாழும்
23.09.13

தலைவன் ஏக்கம்

மொட்டு மலர்வதென் றிட்ட உன்புன்னகை
மொத்தம் வலிதரும் பூங்கணையோ
வட்ட விழித்துப்பொன் வண்ணநிலவிடை
வந்தயல் நிற்பது சொப்பனமோ
எட்டி அணைத்திட விட்டு நகர்ந்தனை
ஏதுமனங் கொண்ட கற்பனையோ
கொட்டும் குழவியென் றெட்டியும் கிள்ளிட
என் நிலைசுற்றிடும் பம்பரமோ

வெட்டும் விழிகளும் நட்ட நடுச்சுனை
வெள்ளியலை துடிப்பென்றிடவோ
பட்டுமலர்முகை பார்த்துக் குனிந்தன
பாவையுன் னோடிழை பொன்னழகோ
விட்டெனை நீமனை பஞ்சணைதூங்கிட
வேதனை கொண்டு நான்ஏங்குவதோ
தொட்டுவிட எண்ண தொல்லிடம் சேருவை
கிட்டவர வெட்கம் கொல்லுவதோ

சுட்டவெயிலெனப் பட்ட துயருடல்
செக்கச் சிவந்திட வான்மகளோ
விட்டுயர் வான்மதி வேண்டி யுலகதன்
வீதிவந் தாளென எண்ணிடவோ
முட்ட மனம்களிப் பெய்தல் கலயத்தில்
மொண்டு நிரப்பிய தண்புனலோ
இட்டவிதி இன்னும் ஏழைநீ வாடென
ஈவிரக்க மின்றிச் சொல்லுவதோ

கொட்டும் மழைவிழக் குட்டை குளமெங்கும்
கூடி வழிந்தோடும் வெள்ளமன்றோ
கிட்ட வந்தவளே இட்ட உணர்வென்ன
வட்டமதி தரை இறங்கியதோ
மொட்டை மலையிடை வீழ்நதியோ அது
முன்னெழுஞ் சாரல்த ருங்குளிரோ
கட்டியணைத்திடக் கையெழுமோ அதைத்
தட்டிவிட் டோடுவ தும்தகுமோ

பொட்டிடும் மாடத்துப் பொற்கிளியே நிதம்
பூரிப் பெழும்நகை கிண்கிணியோ
முட்டி எனைவீழ்த்த இரட்டை புரவியில்
மூர்க்க மெழும் பெண்மை வந்திடுமோ
பட்ட கணைமதன் விட்டவிழியம்பு
திட்டமிட்டே எனைத் தள்ளுவதோ
முட்டைவிழி வேலைக் கொண்டு இதயத்தில்
மோகினி நீவலி செய்திடவோ

முட்டும் காளையெனை மீள எழலின்றி
மென்மை எதிர்கொள்ள அஞ்சுகிறேன்
சட்டை செய்யாதுநீ போவதென்ன - என்னைச்
சஞ்சலத்தில் கைகள் கட்டுவதேன்
செட்டை கொண்ட பலபட்சியினம் விண்ணில்
வட்ட மடிப்பது போல இன்றோ
அட்ட திசையிலும் கொட்டி மலர்தூவ
ஆரணங்கே வலம் வந்திடுவோம்

காலமெனும் மருந்தே உதவும்


எழிலுற உலகும் இயற்கையென் றுறவும்
எமதிடை படைத்தவளே
அழிவுற உடலும் அதிலொரு உயிரும்
அகிலத்தி லாக்கி வைத்தாள்
பொழிலெழு அலையாய் புரள்நிரை வடிவில்
புதுப்புது அனுபவங்கள்
கழிவுறு மனமும் கவிமர முலவும்
கடையுணர் வுடனீந்தாள்

பழியுறப் பகையும் பருவத்தில் மெருகும்
பழமெனக் கனிமனமும்
வழிஎனப் புதர்கொள் வகைபல தடையும்
விதியென வாழ் வமைத்தாள்
குழிபல நடையும் கொளுமிருள் வழியில்
கிடவெனப் பலசமைத்தாள்
பிழியென இதயம் பிரளய வடிவில்
பெருந் துயருற அமைத்தாள்

வழிநடை நெடுகில் வதமிடும் வகையில்
வாழ்வியல் கொடுமையுடன்
தெளிவில இருளும் திசையறு பயணம்
தெரியென அறிவழித்தாள்
மொழிந்திவர் உறவும் முதிர்கனி மரமும்
முடிவினில் நிலம் விழுமாய்
அழிவுற வரமும் அவனியில் விதியாய்
ஆக்கியும் புதிர்விளைத்தாள்

மலையென திடமும் மனதினில் பெரிதும்
மகிழ்வினைத் தருமிவளே
வலையென அன்பும் வரும் பல உறவும்
வரைந்தொரு வாழ்வமைத்தாள்
நிலையெம தன்னை நெறிகொளும் தந்தை
நியதியென் றெமைக் காத்து
விலையறு வாழ்வை விதைத்தவள் பிரிவை
வேண்டுமென் றெமக் களித்தாள்

கலக்கமும் வேண்டாம் கடுந்துயர் போதும்
கடிதெனும் நிலையிதுதான்
உலகிடை எவரும் இலையென உணரும்
ஒரு பெருந்துயர் சமமே
விலகிடும் கவலை வெளியெனு மண்டம்
விளைத்தவள் காலமெனும்
அலகிடும் மருந்தை அளித்தனள், அருந்த
அதிமன துயரழியும்

*************

பூவாக மலரச்செய்

      பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக்
கவிதை  வளமும் தா

கூவாக் குயிலும் குதியா நதியும்
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

என்ன செய்வது?

சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே

எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

கண்டதெல்லாம் துயரமே!






     ( கெட்ட காலக்கனவு)

வெள்ளி யொன்று நிலம் வீழக்கண்டேன் - அடி
வெட்டி மரமொன்று சாயக்கண்டேன்
கொள்ளிவைத்து மனை கூரையெங்கும் - எரி
கொண்டு தீயுமெழக்காட்சி கண்டேன் 
அள்ளிவைத்த முத்து இரத்தினங்கள் - தனை
ஆற்றில் எறிந்திடலாகக் கண்டேன்
தள்ளியெமை வைத்து தானுமுனைக் - கொள்ளத்
தெய்வம் விரும்பிய காலமிதோ

நள்ளிரவில் ஒருசூரியனும் - தோன்றி
நட்ட நடுவானில் நிற்கக் கண்டேன்
எள்ளி நகையிட்டு ஏறியெரு - தினில்
ஏழை உயிர் கொள்ளும் காலன் கண்டேன்
பள்ளியில் கள்ளம் பயிலக் கண்டேன் - ஒரு
பாதையில் முட்களைத் தூவக்கண்டேன்
கள்ளிச் செடி முற்றம் முற்றும்கண்டேன் - ஒரு
காகம் வெள்ளையில் கரையக் கண்டேன்

துள்ளிக் கோவில் வலம், சுற்றுகையில் - ஒரு
தேளும் அரவம் துரத்தக் கண்டேன்
புள்ளியிட்ட வாசல்கோலத்திலே - யின்று
பேயின் முகமொன்று  தோன்றக் கண்டேன்
அள்ளியிட நீரில் ஆயிரமாய்ப் -  புழு
அங்கு மிங்குமென ஓடக்கண்டேன்
சுள்ளிவிறகு பொறுக்கியொரு - வனும்
தீமூட்டி உள்ளே படுக்கக் கண்டேன்

பொன்னி லங்கவில்லைப் பூக்கவில்லை - மனம்
போன இடத்திற்சந் தோசமில்லை
மின்னவில்லை மழை மேகமில்லை - எங்கும்
மெல்ல முளைத்திடும் புல்லுமில்லை
அன்ன முண்ண மனம் கூடவில்ல - அந்த
ஆவின் நறும்பாலும் நஞ்சின் சுவை
என்னே! பிரிந்தனை எங்குசென்றீர் - அம்மா
எப்படிமறந்து வாழுவமோ

காற்றில்வாச மில்லைப் பூக்களில்லை அங்கு
கட்டவிழ்க்கும் இதழ் ஊறவில்லை
தூற்றப் பெரு நெல்லு மூட்டையிலே கொள்ளத்
தோன்றிப் புயலிட்டு ஆற்று நிலை
வேற்றுமை கொண்டில்லம் வீதிவந்து உள்ளே
நாட்டில் நுழைந்தது மிச்சமில்லை
பேற்றென அன்னையும் பேசிமகிழ்ந்திட்ட
பெண்ணின் வாழ்வுமெங்கே, ஏங்குமன்னை!!!

*****************

சிறு பெண்ணே


சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிரிக்கும் மலரம்மா
அன்னை தந்த அழகிய கண்ணே
அன்பின் பரிசம்மா
பொன்போல் கன்னம் பூவிதழ்முல்லை
பொருந்தும் வகையம்மா
புன்னகை யென்றும் புதிதாம் உதயம்
பொழுதும் நினையம்மா

அன்பை என்றும் அகமுள் கொள்வாய்
அதுவுன் பலமாகும்
இன்பம் எங்கே உள்ளது வாழ்வின்
எளிமைத் தனமாகும்
தென்பைக் கொள்ளு தினமும்வாழ்வு
தேனில் இனிதாகும்
தன்னல மெண்ணி தன்னலம் விட்டால்
தகமை உயர்ந்தோங்கும்

கல்விநற் செல்வம் காசொடு பொருளும்
காண்பது பின்னாகும்
வல்வினை யாற்று வளமொடுவாழ
வகுத்திடு விதிதானும்
தொல் திருநாட்டின் சுகமெழு வாழ்வும்
திரும்பிடத் தான்வேண்டும்
அல்லது தீர்ந்தே அறமெழுந் தாட
அடுத்து எதுவாகும்

சிங்கமும் புலிகள் வாழ்வது இன்று
சேர்ந்தோர் வனமல்ல
செங்கணை தீயின் அம்புகள்யாவும்
சிரம்மேல் எரிதூவும்
பொங்கிட வழியும் பாலென் றுள்ளம்
புதிதோர் நிலை காண
நங்கையின் உறவே நாடுன தானால்
நலமே  வாழ்வெய்தும்

தென்னவர் பக்கம் தித்திப்புண்டோ
சிறுமைக் கரமேந்தி
என்னவர் நாட்டில் ஏழ்மைப் பஞ்சம்
இயல்பென் றுருவாக்கி
பொன்னெழில் காணப் புரளும்மதியை
பெரிதோர் வரமென்றே
தன்னினம் தாழத் தனிவழிகாண்போர்
தமிழுக்குரி யோரில்

வெண்ணெய் மலரே விடிவுக ளென்றும்
வெளிச்சம் தனைத்தாரும்
விண்ணிடை காற்றில் விரியும்சுதந்திர
வேட்கை மனம்காணும்
கண்ணிடை போற்றும் கருமணிபோலுன்
கடமைகள் தனையாக்கு
பெண்ணவளே நீ பெரிதோர்சக்தி
புரிவாய் பலம் கொண்டே!

**********************